தமிழ்நாடு

"ஆளுநர்களை வைத்துக் குழப்பம்.. என்ன சாதிக்கப் போகிறீர்கள்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து ஏன்? என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.


CM Stalin
நாட்டின் முக்கியமான திட்டங்கள் மற்றும் சட்டங்களுக்கு இந்தி அல்லது சமஸ்கிருதத்தில் மட்டுமே பெயரிடப்படுவது ஏன் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மத்திய அரசிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"நாட்டு மக்களின் நெஞ்சங்களில் ஏராளமான கேள்விகள் நிரம்பியுள்ளன. அவற்றில் சிலவற்றை நான் கேட்கிறேன்.

* ஊழல்வாதிகள் பா.ஜ.க.வின் கூட்டணிக்கு வந்தபின்பு, வாஷிங் மெஷினில் வெளுப்பது எப்படி?

* நாட்டின் முக்கியமான திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் மட்டுமே பெயரிடப்படுவது என்ன மாதிரியான ஆணவம்?

* மத்திய அமைச்சர்களே நம் குழந்தைகளை அறிவியலுக்குப் புறம்பான மூடநம்பிக்கைகளைச் சொல்லி மட்டுப்படுத்துவது ஏன்?

* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்?

* பா.ஜ.க.வின் தேர்தல் வெற்றிக்காக, மக்களின் வாக்குகளைப் பறிக்கும் வாக்குத் திருட்டைச் சிறப்புத் தீவிரத் திருத்தம் ஆதரிப்பது ஏன்?

* இரும்பின் தொன்மை குறித்து அறிவியல்பூர்வமாகத் தமிழ்நாடு மெய்ப்பித்த அறிக்கையைக்கூட அங்கீகரிக்க மனம்வராதது ஏன்?

* கீழடி அறிக்கையைத் தடுக்கக் குட்டிக்கரணங்கள் போடுவது ஏன்?

இதற்கெல்லாம் பதில் வருமா? இல்லை வழக்கம்போல, வாட்சப் யூனிவர்சிட்டியில் பொய்ப் பிரசாரத்தைத் தொடங்குவீர்களா?" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.