தமிழ்நாடு

'திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் தொடர்பு இல்லை'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!

"அரசின் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

'திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் தொடர்பு இல்லை'- முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
CM Stalin
பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடிக்கும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியைத் தொடர, மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கிடும் “அன்புக்கரங்கள்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் தொடர்பில்லை

இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "திராவிட ஆட்சிக்கு இலக்கணம் எழுதிய மாபெரும் தலைவரின் பிறந்தநாளில் இன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் என்றால் எல்லாருக்கும் எல்லாம். ஆனால் அதற்காகப் பாடுபடுவது எளிதானது அல்ல. சாமானிய மக்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம். மக்களின் குரலாக திமுக ஒலித்துக் கொண்டிருக்கிறது. எங்கள் அடிப்படையே பதவி அல்ல, பொறுப்புதான். அதிகாரம் என்பது சாமானியனுக்காகப் போராடுவது.

கொரோனாவால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.3,000 வீதம் மூன்று ஆண்டுகள் தந்தோம். குழந்தைகளுக்காக பல்வேறு திட்டங்களை நாங்கள் கொண்டு வருகிறோமே, அதெல்லாம் வாக்கு அரசியலுக்காகச் செய்வதா? இந்தத் திட்டங்களுக்கும் வாக்கு அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கையை பெற்றதற்கான அடையாளம்

மேலும், "வாக்கு என்பது மக்களின் நம்பிக்கையைப் பெற்றதற்கான அடையாளம். அந்த நம்பிக்கையை பெறும் கொள்கையும், செயல் திட்டமும், உழைப்பும் எங்களிடம் உள்ளது. அந்த நம்பிக்கையினால் பெறப்பட்டிருக்கும் இந்தப் பொறுப்பு, சமூகத்தின் கடைக்கோடி மனிதரையும் கைக்கொடுத்து மேலே தூக்கி விடுவதற்காகக் கிடைத்த வாய்ப்பு. அந்தக் கையாகத்தான் என் கை இருக்கும். அப்படித்தான் இருந்துகொண்டு இருக்கிறது.

இனிமேல் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களை கவனித்துக்கொள்ள அன்புக்கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உங்களுக்காக நான் இருக்கிறேன். உங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன்" என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.