தமிழ்நாடு

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு

இந்தியாவில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே ஜி பிஸ்கெட் பாக்கெட்டை, காசாவில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு வாங்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒருபுறம் இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலாலும், மறுபுறம் பசி பட்டினியாலும் காசா மக்கள் செத்து மடியும் நிலையில், அங்குள்ள உணவு தட்டுப்பாடு, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருவது உலகளவில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு
ரூ.5 பார்லே ஜி 2,400 ரூபாய்க்கு... நிவாரணமா? ரத்தம் உறுஞ்சும் மிருகமா? மிரளவைக்கும் காசாவின் விலை உயர்வு
இஸ்ரேல் இராணுவம் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2023 அக்டோபரில் தொடங்கிய இந்த யுத்தம் இன்னும் முடியாமல் நீண்டுக்கொண்டே செல்கிறது. என்னதான் ஐ.நா. வலியுறுத்தினாலும், உலக நாடுகள் எச்சரித்தாலும், ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக் அழித்தொழிக்கும் வரை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை என்று இஸ்ரேல் திட்டவட்டமாக கூறி வருகிறது. குடியிருப்புகள், கல்விக் கூடங்கள், மருத்துவமனைகள் என அனைத்தும் கான்கிரீட் குவியலாக காட்சியளிக்கும் காசாவில் திரும்பும் திசையெல்லாம் மரண ஓலத்துடன், பிஞ்சுக் குழந்தைகள் உணவுக்காக கதறியழும் குரலும் தான் கேட்கின்றன.

உலக நாடுகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை காசாவுக்குள் அனுமதிக்க இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும் போதும் மட்டும் குறைந்த அளவிலான வாகனங்களை இஸ்ரேல் ராணுவம் அனுமதிக்கிறது. ஒருபுறம் காசாவில் வாழும் குழந்தைகள் பசி, பட்டினியால் ஊட்டச்சத்து குறைப்பாட்டுடன் வாடும் நிலையில், மறுபுறம் எல்லையில் காக்கவைக்கப்படும் வாகனங்களில் உள்ள உணவுப் பொருட்கல் கெட்டுப் போய் குப்பைகளில் கொட்டப்படும் சம்பவங்களும் தொடர்ந்து வருகிறது.

மனிதாபிமான உதவியாக வழங்கப்படும் பொருட்களை, ஹமாஸ் அமைப்பினர் திருடிச் செல்வதாக குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் அரசு, 2023ல் போர் தொடங்கியதிலிருந்தே குறிப்பிட்ட அளவிலான மனிதாபிமான உதவிகளையே காசாவுக்குள் அனுமதித்து வந்தது. இதனால் அப்போதிலிருந்து அங்கு உணவுக்காக போராடும் நிலை இருந்து வந்தாலும், தற்போது அதனை முழுவதுமாக நிறுத்தியதால் குழந்தைகள் உள்பட பலரும் பசியால் வாடி இறந்துள்ளனர். இப்படி காசாவுக்கு கிடைக்க வேண்டிய மனிதாபிமான உதவிகள் அனைத்தையும் முடக்கியதன் மூலம் ஹிட்லரையே இஸ்ரேல் மிஞ்சியதாக உலக மக்கள் கொந்தளித்தனர்.

இதன் விளைவாக காசாவில் உணவு பொருட்களின் விலை அதிகரித்து, மக்களை இன்னும் அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அதாவது, 1 கிலோ சக்கரையின் விலை 4,914 ரூபாய்க்கும், 1 லிட்டர் சமையல் எண்ணெய் 4,177 ரூபாய்க்கும், 1 கிலோ உருளைக்கிழங்கு 1,965 ரூபாய்க்கும், 1 கிலோ வெங்காயம் 4,423 ரூபாய்க்கும் விற்அனை செய்யப்படுகிறது. ஒரு குவளை காஃபி ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், எல்லாவற்றிற்கும் உச்சமாக இந்தியாவில் வெறும் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும், பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் காசாவில் இரண்டாயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் துயரச் செய்தி வெளியாகி உலகை உலுக்கியுள்ளது.

காசாவில் வசிக்கும் முகமது ஜாவத் என்பவர் தனது குழந்தைக்கு மிகவும் பிடித்தமான பார்லே ஜி பிஸ்கட்டை வாங்கியுள்ளார். இதற்கு அவர் 2,400 ரூபாய் செலவழித்ததாக எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பூதாகரமாக காசாவில் உள்ள அறுவை சிகிச்சை நிபுணர் காலித் அல்ஷாவா என்பவர், “மனிதாபிமான உதவிகள் என்ற பெயரில் காசாவிற்குள் வரும் பொருட்கள், பெரும்பாலான மக்களிடம் போய் செல்வதில்லை. தற்போது இருக்கும் உணவு தட்டுப்பாடால் அப்பொருட்கள் பதுக்கப்பட்டு, கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன” என பகிரங்க குற்றச்சாட்டை கூறியுள்ளார். மேலும், அல்ஷாவாவும் ஒரு பாக்கெட் பார்லே ஜி பிஸ்கெட்டை வாங்க 240 ரூபாய் செலவழித்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

1938ம் ஆண்டில் சுதேசி இயக்கத்தின் போது அறிமுகமான பிஸ்கேட் தான் பார்லே ஜி. விலை உயர்ந்த பிரிட்டீஷ் திண்பண்டங்களை வாங்கமுடியாமல் இருந்த எளிய மக்களுக்காக குறைந்த விலையில் விற்பனையான பிஸ்கெட் தான் இந்த பார்லே ஜி. அப்படிபட்ட ஒரு பிஸ்கெட்டை, போர் சூழலில் விலை உய்ர்த்தி, மக்கள் வாங்கமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது காசா. இதனால் காசாவில் எப்போது போர் நிறுத்தம் வருமோ என உலக நாடுகள் கவலை தெரிவித்துவருகின்றனர்.