தமிழ்நாடு

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை!

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததல் விவசாயிகள் கவலை ஆழ்ந்துள்ளனர்.

தொடர் மழையால் நெற்பயிர்கள் சேதம்.. விவசாயிகள் கவலை!

மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது அலங்காநல்லூர், சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தண்டலை, குமாரம் அரியூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

அலங்காநல்லூர் அருகே தண்டலை பகுதியில் முல்லைப் பெரியார் பாசன கால்வாய் மூலமாக இரண்டாம் போகம் நெல் பயிர்கள் சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இப்பகுதி விவசாயிகள் சுமார் 500 ஏக்கருக்கும் அதிகமாக நெல் பயிரிட்டு இருந்தனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாராக இருந்தன.

இந்த நிலையில் தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. அந்த நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கின. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் மழையில் சேதமடைந்ததால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் முதல் 30,000 வரையிலும் செலவு செய்து நெல் பயிரிட்டு இருந்தோம். நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்து அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த 3 நாட்களாக பெய்த தொடர்மழையால் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன.

விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வடியாததால், நெற்பயிர்களை அறுவடை செய்ய முடியவில்லை. நெற்பயிர்கள் மீண்டும் முளைக்க தொடங்கியதால் வீணாகின. எனவே மழையால் சேதமடைந்த பயிர்களை தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் நேரில் ஆய்வு செய்து கணக்கிட்டு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்