தமிழ்நாடு

அன்னை இல்லம் வீட்டில் உரிமை இல்லை.. ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்

அன்னை இல்லம் வீட்டின் மீது தனக்கு தற்போது எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை என கூறி ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அன்னை இல்லம் வீட்டில் உரிமை இல்லை.. ராம்குமார் பிரமாண பத்திரம் தாக்கல்

நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரித்தனர். பட தயாரிப்புக்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தனர்.

இந்த கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் சேர்த்து 9 கோடியே 39 லட்சம் ரூபாயை செலுத்த ஏதுவாக 'ஜகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவன நிர்வாக இயக்குநரிடம் ஒப்படைக்கும்படி மத்தியஸ்தர் கடந்த 2024-ஆம் ஆண்டு மே 4-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவின்படி, படத்தின் அனைத்து உரிமைகளையும் வழங்காததை அடுத்து மத்தியஸ்தர் தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் ராம்குமாரின் தந்தையான சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்து பொது ஏலம் விட உத்தரவிடக் கோரி தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி நடிகர் பிரபு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது துஷ்யந்தின் தந்தை ராம்குமார் தரப்பில் அன்னை இல்லத்தின் மீது தனக்கு எந்த உரிமையும், பங்கும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இது சம்பந்தமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமார் தரப்புக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தஸ் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அன்னை இல்லத்தை தனது சகோதரர் நடிகர் பிரபுவுக்கு தனது தந்தை சிவாஜி கணேசன் உயில் எழுதி வைத்துள்ளதாகவும், அந்த வீட்டின் மீது தனக்கு தற்போது எந்த உரிமையும், எந்த பங்கும் இல்லை என கூறி ராம்குமார் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, நடிகர் பிரபு மற்றும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. வாதங்கள் முடிவடையாததால் விசாரணை ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.