தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: பனையூரில் விசாரணையை தொடங்கிய சிபிஐ!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர்  கூட்ட நெரிசல் வழக்கு: பனையூரில் விசாரணையை தொடங்கிய சிபிஐ!
CBI Investigation in Panaiyur
கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகள் இன்று (நவ. 3) சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் மற்றும் வழக்கு விவரம்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்புப் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கரூர் நகரக் காவல் ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் நிர்மல் குமார், மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ அதிகாரிகளின் விசாரணை

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பிரவீன் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17-ஆம் தேதி முதல் இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு குழுவினர் கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் மற்றும் அப்பகுதி மக்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிபிஐ விசாரணைக்கு இன்று 7 வணிகர்கள் ஆஜராகியுள்ளனர். மற்றொரு சிபிஐ குழுவினர் இன்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் சம்பவம் தொடர்பாகத் தவெக தலைவர் விஜய் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெறுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கின் முக்கியத்துவம் கருதி, சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.