தமிழ்நாடு

'எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்'- முதல்வர் ஸ்டாலின் பதிவு!

"அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

'எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்'- முதல்வர் ஸ்டாலின் பதிவு!
CM Stalin
முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ஒருவார கால பயணமாக கடந்த 30 ஆம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நாளை (செப்.8) அதிகாலை சென்னை திரும்பவிருக்கிறார்.

இந்தப் பயணத்தின் மூலம், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இருந்து மொத்தம் ரூ.15,516 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

ஜெர்மனியில் பல முன்னணி நிறுவனங்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதன் மூலம், அந்நிறுவனங்கள் ரூ.7,020 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்தில் உள்ள இந்துஜா குழுமம் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி, ரூ.8,496 கோடி மதிப்பில் முதலீடுகளை அவர் ஈர்த்தார்.

ஆக்ஸ்போர்டில் பெரியார் உருவப் படம் திறப்பு

முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கடந்த 5 ஆம் தேதி பெரியாரின் உருவப் படத்தை திறந்து வைத்ததும் இந்தப் பயணத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது. "பெரியாரின் படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்ததை என்னுடைய வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

'எண்ணிலடங்கா நினைவுகளுடன்..'

இந்தப் பயணம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய டிஎன் ரையிஸிங் பயணம், லண்டன் மாநகரில், அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன்.

இத்தனை நாளும் தங்கள் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட தமிழ் வம்சாவளியினருக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.