தமிழ்நாடு

ஜாதி சகதியில் இபிஎஸ் மாட்டிக்கொள்ளக்கூடாது – கிருஷ்ணசாமி அட்வைஸ்

இருக்கன்குடி கோயில் சொத்துக்களை வைத்து கட்டப்படும் கட்டடங்களில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து விசாரணை கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

 ஜாதி சகதியில் இபிஎஸ் மாட்டிக்கொள்ளக்கூடாது – கிருஷ்ணசாமி அட்வைஸ்
புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மாநில மாநாடு குறித்த விளக்க கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை நடத்தி வருகிறார். இன்று பரப்புரைக்கு செல்லும் முன்பாக ராஜபாளையத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அடிப்படை வசதி கிடைக்கவில்லை

அவர் கூறும்போது, “சாத்தூரில் அமைந்துள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு நடத்துகின்றனர். இருக்கன்குடி ஊராட்சி எல்லைக்கு உட்பட்டு இருந்த இந்த கோயில் உள்நோக்கத்தோடு அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் இணைந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கிராமத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி கிடைக்கவில்லை.


எனவே மீண்டும் இருக்கன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கோயிலின் எல்லையை இடமாற்றம் செய்ய கோரியும், இக்கோயிலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எண்ணற்ற புகார்கள் உள்ளவர்கள் மட்டுமே பரம்பரை அறங்காவலராக இருந்து வருகின்றனர். இதனால் பல்வேறு தவறுகள் நடந்து வருகிறது.

கூட்டணி ஆட்சிதான் மலரும்

தமிழ்நாடு அரசின் அறங்காவலர் சட்ட விதிகளின்படி தகுதி வாய்ந்த அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களும் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தியும், கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம் மற்றும் பணம் ஆகிவற்றை மூலதனமாக கொண்டு ரூ.130 கோடி மதிப்பீட்டில் தரமற்ற முறையில், பக்தர்களுக்கு பயன்படாத வகையில் கட்டப்பட்டு வரும் கட்டடங்கள் குறித்து உரிய விசாரணை கோரியும் வரும் 24ஆம் தேதி விருதுநகர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

130 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரமற்ற முறையில் மூன்று மயானங்களில் உள்ளடக்கி கட்டப்படுகிறது. எந்த ஊராட்சியிலும் அனுமதி வாங்காமல் எதற்காக அந்த கட்டடம் கட்டப்படுகிறது. ஆட்சியில் யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் வரும் தேர்தலில் ஒற்றைக் கட்சி ஆட்சி முறைக்கு முடிவு வரும். ஒரே கருத்துடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சிதான் மலரும். தற்போது காங்கிரஸ் ஆட்சியில் பங்கு என்ற முழக்கத்தை எழுப்பியுள்ளது. இதே முழக்கம் பல முனைகளில் இருந்து வரும். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிக்கான காலகட்டம் கனிந்து வருகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் அழகிரி கருத்தை புறந்தள்ள முடியாது.

இபிஎஸ்க்கு கிருஷ்ணசாமி அட்வைஸ்

ஜாதி சகதிக்குள் எடப்பாடி பழனிசாமி மாட்டிக்கொள்ளக்கூடாது. வாக்கு வங்கிக்காக ஒரு சமுதாயத்திற்காக அறிவிப்புகள் வெளியிடுவது எதிர் விளைவுகளை உருவாக்கும். தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை விட்டுவிட்டு கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை என்ற பழமொழிக்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். 2021 தேர்தலுக்கு முன்பாக தனி சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு ஒதுக்கீடு செய்தது பிள்ளையார் பிடிக்க குரங்கானது. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அரசாங்கம் அனைவருக்கும் பொதுவான அரசாக இருக்க வேண்டும். அரசியல்வாதிகள் நிதானத்துடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்” என தெரிவித்தார்.