தருமபுரி மாவட்டம் ஏரியூர் அருகே ஏமனூர் வனப்பகுதியில் ஆண் யானை கடந்த மார்ச் 1 ம் தேதி இறந்த நிலையில் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். விசாரணையில் ஆண் யானையை கொன்று தந்தம் கடத்தியது தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறையினர் கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார், கோவிந்தராஜ் மற்றும் கர்நாடக மாநிலம் கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த தினேஷ் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக கொங்காரப்பட்டி பகுதியை சேர்ந்த பலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில் விசாரணைக்கு சென்ற நபரில் செந்தில் என்பவர் வீடு திரும்பவில்லை எனக் கூறி அவரது மனைவி சித்ரா தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த மார்ச் 19 ஆம் தேதி மனு அளித்தார்.
கடந்த மார்ச் 18 ஆம் தேதி அன்று வனப்பகுதிக்குள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட செந்தில் அருகே இருந்த வனத்துறையினரை தாக்கி விட்டு கைவிலங்குடன் தப்பித்து ஓடி தலைமறைவாக இருப்பதாகவும், அவரை வனத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும் மாவட்ட வனத்துறை அலுவலர் தெரிவித்தார். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் செந்தில் உடல் வனப்பகுதியில் அழுகிய நிலையில் நாட்டு துப்பாக்கியுடன் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டது.
மேஸ்திரி வேலை செய்து வரும் செந்திலுக்கு மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கும் இச்சம்பவத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தற்போது முதற்கட்டமாக சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் மற்றும் வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சடலத்தை அனுப்பி வைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முகம் மற்றும் கை கால்கள் சிதைந்துள்ளது என்றும், கடந்த 18 ந் தேதியே தனது கணவரை வனத்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து விட்டனர் என்றும், தனது கணவரின் சாவிற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என உயிரிழந்த செந்திலின் மனைவி தெரிவித்தார்.
இந்நிலையில் பிரேத பரிசோதனையை தங்கள் தரப்பு மருத்துவரை கொண்டு நடத்த வேண்டும் எனவும் விசாரணை தன்னிச்சையான விசாரணை அமைப்பிற்கு மாற்ற வேண்டும் என கோரி சித்ரா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணை எடுக்க கோரி நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு வழக்கறிஞர் எம்.ஆர் ஜோதிமணியன் முறையீடு செய்தார். முறையீட்டை கேட்ட நீதிபதி இன்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
யானை வேட்டையாடியதாக விசாரணைக்கு சென்றவர் மர்ம மரணம்- அவசர வழக்காக இன்று விசாரணை!
தருமபுரியில் யானை வேட்டையாடியதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்ற நபர் மர்ம மரணம் தொடர்பாக மறு பிரேத பரிசோதனை செய்ய கோரி முறையீடு அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.