அதிமுகவினர் சஸ்பெண்ட்
டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில் 'அந்த தியாகி யார்' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் தமிழக சட்டப்பேரவைக்கு இன்று வருகை தந்தனர். மேலும் டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.ஆனால் இதற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி மறுத்ததால் அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தாங்கள் சிக்கி உள்ள வழக்குகளில் இருந்து தப்பிக்க காலில் விழுந்தவர்கள் எதிர்க்கட்சியினர் என விமர்சனம் செய்தார். மேலும் முதலமைச்சர் பதவிக்காக காலில் விழுந்தவர் எல்லாம் தியாகி யார் என பதாகை வைத்துள்ளார் என்றும் நொந்து போய் நூடுல்ஸ் ஆன அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். இதனால் பேரவையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிமுக உறுப்பினர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
டாஸ்மாக் ஊழல்
மேலும் டாஸ்மாக் ஊழல் குறித்து தனது அனுமதி இல்லாமல் காண்பித்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார்.இதைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சி என்ற முறையில் டாஸ்மாக் ஊழல் குறித்து பேச அனுமதி கேட்டும் அனுமதி மறுக்கிறார்கள்.
டாஸ்மாக் வழக்கை வேறு உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உச்சநீதிமன்றம் சென்றது ஏன்? தமிழ்நாட்டில் உள்ள உயர்நீதிமன்றம் நேர்மையான உயர்நீதிமன்றம் என அனைவருக்கும் தெரியும். டாஸ்மாக் தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
திமுக அரசாங்கம் செய்த துரோகம்
டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது. நமது மாநிலத்தில் வழக்கு நடந்தால், திமுக செய்த தவறு ஊடகங்களில் வெளியாகும் என அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்.
கச்சத்தீவை யாருடைய ஆட்சியில் தாரை வார்த்தீர்கள்? எதை மறைக்க பார்க்கிறீர்கள்? கச்சத்தீவை தாரை வார்த்ததும் திமுக தான், அதை எதிர்த்து குரல் கொடுப்பதும் திமுக தான்.
மீனவர்களுக்கு நன்மை செய்வது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க முதலமைச்சர் முயற்சி செய்கிறார். தமிழ்நாட்டிற்கு திமுக அரசாங்கம் செய்த துரோகம் பற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்.
அதிமுகவினர் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல
16 ஆண்டுகாலம் மத்திய அரசுடன் கூட்டணியில் இருந்த போது திமுக என்ன செய்தது? தும்பை பிடித்து வாலை பிடித்த கதையாக திமுக செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக தான். நாட்டு மக்களை திமுக ஏமாற்றுகிறது” என ஆவேசமாக பேசினார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மாணவர்கள், மீனவர்கள், மக்கள் என அனைவரும் நொந்து நூலாய் போயிருக்கிறார்கள். இன்று மீனவர்களுக்கு பல அறிவிப்புகள் வெளியிட்டு இருக்கிறார். 4 ஆண்டுகால ஆட்சியில் மீனவர்கள் படும் துன்பம் இவருக்கு தெரியாதா? 9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது, அனைத்து அறிவிப்புகளும் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் யாருக்கும் அஞ்சுபவர்கள் அல்ல என தெரிவித்தார்.
அரசியல்
டாஸ்மாக் விவகாரம்: திமுகவுக்கு ஏன் அச்சம் – இபிஎஸ் சரமாரி கேள்வி
டாஸ்மாக் விவகாரத்தில் திமுக அரசு தவறு செய்துள்ளது நிரூபணம் ஆகியுள்ளது