சென்னை விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஜாம்பியா நாட்டைச் சேர்ந்த சுமார் 30 வயது இளம்பெண் மேற்கு ஆப்பிரிக்க நாடான சேனைகல் நகரில் இருந்து துபாய் வழியாக சென்னைக்கு சுற்றுலா பயணிகள் விசாவில் வந்திருந்தார். அந்தப் பயணி மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பெண் சுங்கத்துறை அதிகாரிகள், ஜாம்பியா நாட்டுப் பெண்ணை தனி அறைக்கு அழைத்து சென்று பரிசோதித்தனர். அப்போது பெண்ணின் உள்ளாடைக்குள் ஒரு பார்சல் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
அந்தப் பார்சலில் 460 கிராம் கொக்கையின் போதைப்பொருள் இருந்ததை கண்டு பிடித்தனர். அதன்பின் பெண்ணின் வயிறு அளவு அதிகமாக பெரிதாக இருந்ததை, பெண் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். பெண்ணை சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது. அவருடைய வயிற்றுக்குள் பெரிய கேப்சல்கள் விழுங்கி இருப்பது தெரிய வந்தது.
உடனடியாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, மருத்துவக் குழுவினர் வயிற்றுக்குள் இருந்த கேப்சல்களை ஒவ்வொன்றாக வெளியில் எடுத்தனர். மொத்தம் 12 கேப்சல்கள் இருந்தன. இவைகளில் 150 கிராம் கொக்கையின் போதை பொருள் இருந்தது. ஜாம்பியா நாட்டு இளம் பெண்ணிடம் இருந்து,610 கிராம் கொக்கையின் போதை பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.1 கோடி ஆகும். இந்த பெண் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வந்தது. இவர் சென்னையில் யாரிடம் இந்த போதை பொருளை கொடுக்க எடுத்து வந்தார்? என்று சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.
இதற்கிடையே தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதித்தனர். தொடந்து, சென்னையைச் சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் ஏற்பட்டு, அவருடைய உடமைகளையும் சோதனை நடத்திய நிலையில், போதைப் பொருளை கண்டு பிடிக்கக்கூடிய சுங்கத்துறை மோப்ப நாயை வைத்து, வாலிபரின் உடைமைகளை சோதித்த போது போதைப்பொருள் இருப்பதை மோப்ப நாய் உறுதி செய்தது.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் உடமைகளை திறந்து பார்த்து சோதித்த போது, பதப்படுத்தப்பட்ட உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருந்ததை கண்டு பிடித்தனர். சுமார் 1 கிலோ 816 கிராம் உயர் ரக கஞ்சா போதை பொருளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.1.9 கோடி ஆகும். வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அடுத்தடுத்து நடத்திய சோதனைகளில், ரூ.8 கோடி மதிப்புடைய கொக்கையின் போதை பொருள், உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஜாம்பியா நாட்டு இளம் பெண், சென்னையைச் சேர்ந்த வாலிபர் ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.8 கோடி மதிப்புள்ள கோக்கையன், கஞ்சா பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு
8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்.. பெண் உட்பட 2 பேர் கைது!
ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.8 கோடி மதிப்புடைய கொக்கையின், கஞ்சா பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் ஜாம்பியா நாட்டைச்சேர்ந்த பெண் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.