தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுநருடன் மோதல்: மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி கைதாகி ஜாமினில் விடுதலை!

ஆட்டோ ஓட்டுநருடன் மோதல்: மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி கைதாகி ஜாமினில் விடுதலை!
ஆட்டோ ஓட்டுநருடன் மோதல்: மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகி கைதாகி ஜாமினில் விடுதலை!
மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், விசாரணைக்கு பின் காவல் நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி சினேகா மோகன் தாஸ் கடந்த திங்கள்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் தி.நகரில் உள்ள தனது வீட்டிலிருந்து மாநிலக் கல்லூரி செல்வதற்காக ஆட்டோவை புக் செய்துள்ளார்.

அப்போது எழுந்த தகராறில் ஆட்டோ ஓட்டுநரான ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த பிரசாத்(25) என்ற இளைஞரை மிகக் கடுமையாக தாக்கி செருப்பால் அடுத்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

ஆட்டோ ஓட்டுநர் தன்னை அநாகரிகமாக பேசி அடித்ததாகவும் அதனால்தான் ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்ததாகவும் மக்கள் நீதி மய்யம் கட்சியிம் பெண் நிர்வாகி ஸ்னேகா மோகன்தாஸ் தெரிவித்து புகார் அளித்த நிலையில், மயிலாப்பூர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரான பிரசாத் என்ற இளைஞரை கைது செய்தனர்.

இந்த நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தன் மீது தவறு இல்லை எனவும் சாலையில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால் தனக்கு தெரிந்த வழியில் செல்லலாமா? என அவர்களிடம் கேட்டு தான் சென்றதாகவும், ஆனால் தன்னை முதலில் ஆத்திரமூட்டி அடித்து அநாகரீகமாக பேசி, பின் தான் கோபப்படும்போது அவர்கள் வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் பிரசாத்தை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றபோது, நீதிபதி பிரசாத்தை நீதிமன்ற ஜாமீனில் விடுவித்தார்.

இதனிடையே, பிரசாத்திடம் புகார் மனு பெறப்பட்டு மக்கள் நீதி மய்யம் கட்சியின் பெண் நிர்வாகி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்க பதிவு செய்யப்பட்டது. குறிப்பாக ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று காலை விசாரணைக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியிம் பெண் நிர்வாகி சினேகா மோகன்தாஸ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜர் ஆனார். அப்போது அவரை கைது செய்த மயிலாப்பூர் போலீசார் பின், காவல் நிலைய ஜாமினில் அவரை விடுவித்தனர்.