தமிழ்நாடு

'அன்பு ஆட்சியர் ஜெயசீலன் நகர்'.. கலெக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திருநங்கைகள்

'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் மூலம் வீடு கட்டித்தந்த மாவட்ட ஆட்சியரின் பெயரை தாங்கள் வசிக்கும் பகுதிக்கு சூட்டிய திருநங்கைகளின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அன்பு ஆட்சியர் ஜெயசீலன் நகர்'.. கலெக்டருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த திருநங்கைகள்
குடியிருப்பு பகுதிக்கு ஆட்சியர் பெயரை சூட்டிய திருநங்கைகள்
திருநங்கைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ் வீடுகட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் ஊராட்சி, கோவில்புலிகுத்தி கிராமத்தில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, திருநங்கைகளுக்கு 24 வீடுகளைக் கட்டுவதற்கு ஒரு 'வெண்டார்' நியமனம் செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

மேற்கண்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட 24 திருநங்கைகளுக்காக, புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தருவதற்கு, சமூகத்தின் மீதான தொழில் நிறுவனங்களின் பொறுப்பு நிதியிலிருந்து (CSR Fund), ஒரு வீட்டிற்கு தலா ரூ.1,00,000/-வீதம் 24 வீடுகளுக்கு ரூ.24,00,000/- கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து தரப்பட்டது.

அதுமட்டுமின்றி, ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக குழாய்கள் அமைத்து தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சார வசதி அமைத்துத் தரப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சிரமமின்றி அன்றாடப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, திருநங்கைகள் குடியிருக்கும் வீடுகளுக்கு, அடிப்படை வசதிகளான சிறுபாலம் அமைத்தல், வாறுகால் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல் பணிகள், ரூ.21,15,000/- மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றியப் பொது நிதியின் கீழ் செய்து முடிக்கப்பட்டது.

தமிழக அரசின் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம் மூலம் திருநங்கைகளுக்கு உரிய வசிப்பிடம் அமைத்துக் கொடுத்ததை தொடர்ந்து, ஆட்சியர் ஜெயசீலனுக்கு திருநங்கைகள் மத்தியில் நற்பெயர் ஏற்பட்டுள்ளது. மேலும், திருநங்கைகளுக்கு சமூகத்தில் ஒரு அந்தஸ்து கிடைக்கும் விதமாக, உரிய வாழ்வாதாரம் அமைத்துக்கொள்ள, தொழில்/பணி போன்ற ஏற்பாடுகளையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் முன்னெடுத்து வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, திருநங்கைகளுக்காக புதிதாகக் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமையில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்துவைத்தார். இந்த நிலையில், தங்களுக்கு குடியிருப்பு வசதி செய்து கொடுத்த ஆட்சியருக்கு நன்றி செலுத்தும் விதமாக 'அன்பு ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் நகர்' என்று அப்பகுதிக்கு திருநங்கைகள் பெயர் சூட்டியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.