தமிழ்நாடு

அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள்.. நடவடிக்கை எடுக்காத அரசு.. சிஏஜி அறிக்கை

தமிழக அரசு உத்தரவை மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

அதிக கட்டணம் வசூலித்த கல்லூரிகள்.. நடவடிக்கை எடுக்காத அரசு.. சிஏஜி அறிக்கை
ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்படுகிறது.

அந்த வழிகாட்டுதல்களின் படி, இளநிலை படிப்புகளுக்கு 48 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 58 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

அரசு உத்தரவை மீறி 2021- 24ம் ஆண்டுகளில் 72 கல்லூரிகளில் 1 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களிடம் நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ரூ 3.14 கோடி ரூபாய் அரசு உத்தரவுக்கு புறம்பாக வசூலிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மாணவர்களிடம் அரசு உத்தரவுக்கு புறம்பாக ரூ 3.14 கோடி வசூலித்தது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்பும் அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சிஏஜி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.