சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் யார் அந்த சார் என்ற கேள்வி எழுப்பினால் எதற்காக பதறுகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை எனவும், குற்றவாளிக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தருவோம் என உறுதியளித்ததோடு, இதையே மீண்டும் மீண்டும் பேசினால் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை பிரச்னையை தொடங்க வேண்டியிருக்கும் எனக்கூறினார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த அடுத்த 24 மணி நேரத்தில் 4 குற்றவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். குறுக்கிட்டு பேசிய முதல்வர், பொள்ளாச்சி வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை எனவும், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக பதிலளித்தார்.
மேலும் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் அடுத்த நாளே கைது செய்யப்பட்ட குற்றவாளி திமுகவின் அனுதாபி தான் எனவும், திமுகவில் இல்லாதவரை எப்படி நீக்க முடியும் எனவும் முதல்வர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புகார் அளித்தவுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் மூன்று குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டது தான் உண்மை என விளக்கமளித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், பொள்ளாச்சி பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கவே இரண்டு ஆண்டுகள் ஆகியதாகவும், புகார் அளித்த 12 நாட்களுக்கு பிறகு தான் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, உண்மைக்கு புரம்பான செய்தியை திரும்பத் திரும்ப சொல்லி உண்மையாக்க முயற்சிக்க கூடாது என பேசினார். தொடர்ந்து பேசிய முதல்வர், இந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில் நான் கூறியதற்கான ஆதாரத்தை நாளை சபாநாயகரிடம் வழங்குவதாகவும், எதிர்க்கட்சிதலைவரிடம் இருக்கும் ஆதாரத்தையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் தான் சொல்வது தவறாக இருந்தால் நீங்கள் அறிவிக்கும் தண்டனையை ஏற்பதாக அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தான் சொல்வது சரியாக இருந்தால் நாங்கள் அறிவிக்கும் தண்டனையை ஏற்கத் தயாரா என சவால் விடுத்தார். இறுதியில் குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, இருவரும் நாளை காலை என்னிடம் ஆதாரத்தை வழங்குங்கள் எனக்கூறி விவாதத்தை முடித்து வைத்தார்