தமிழ்நாடு

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!

போலி ஆதார் அட்டைகளை தயாரித்து இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயன்ற 7 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

போலி ஆதார் அட்டை.. இந்திய பாஸ்போர்ட் பெற்று வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!
போலி சான்றிதழ்.. வெளிநாடுகளுக்கு தப்ப முயன்ற 7 பேர் கைது!
சென்னை பன்னாட்டு விமான நிலைய வெளிநாட்டவர் பதிவு மண்டல அலுவலர் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. அதில், போலி ஆவணங்களின் மூலம் தங்களின் உண்மையான சுய விவரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து சட்டவிரோதமான முறையில் பாஸ்போர்ட் பெற்று சிலர் வெளிநாடு செல்ல முயன்று வருவதாகவும், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படியும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை மத்திய குற்றப்பிரிவின் போலிக் கடவுச்சீட்டு புலனாய்வு பிரிவின் போலீசார் வங்காளதேசத்தைச் சேர்ந்த முகமது கசிம் பதான், இலங்கையைச் சேர்ந்த சங்குபிள்ளை சரோஜினி தேவி, நேபாளத்தைச் சேர்ந்த தன்ராஜ் பொக்ரியால், ஒடிசாவைச் சேர்ந்த பினா தாஸ், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி, ஆந்திராவைச் சேர்ந்த சென்னம்மா, சிவகங்கையைச் சேர்ந்த பரகதுல்லா ஆகியோயோரை கைது செய்தனர்.

விசாரணையில், கைதானவர்கள் தங்களின் உண்மையான சுய விவரங்கள் மற்றும் குடியுரிமையை மறைத்து மோசடியான முறையில் இந்திய அடையாள ஆவணங்களான ஆதார், வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பான் கார்டு போன்றவைகளை பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் அதன் மூலம் சட்டவிரோதமான முறையில் மத்திய அரசை ஏமாற்றி பாஸ்போர்ட் பெற்று அதன்மூலம் வெளிநாடுகளுக்கு செல்ல முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைதானவர்களை ஆலந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்திய நாட்டை சேர்ந்தவர்களான பினா தாஸ், ராமமூர்த்தி, சென்னம்மா, பரகதுல்லா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உதவியது சில ஏஜெண்டுகள் என்பதனை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் யார்? எங்குள்ளார்கள்? என்பதை கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த வழக்கில் வெளிநாட்டைச் சேர்ந்தவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் வெகுவாக பாராட்டி உள்ளார். "முறையான அனுமதி பெறாமல் இயங்கி வரும் டிராவல்ஸ் நிறுவனங்களை நம்பி, அவர்களின் தவறான வழிகாட்டுதலின்பேரில் பொதுமக்கள் போலியான ஆவணங்களை பெற வேண்டாம் என்றும், அதனடிப்படையில் மோசடியாக பாஸ்போர்ட்களை பெற்று வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிக்க வேண்டாம் என்றும், அவ்வாறு செல்பவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருக்கும் ஏஜெண்டுகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.