அரசியல்

திமுகவிடம் பதற்றம் தெரிகிறது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து

திமுகவிடம் பதட்டம் தெரிகிறது. 2026ம் ஆண்டு ஆட்சியில் தொடர விடமாட்டோம் என தமிழிசை செளந்தரராஜன் பேட்டி

  திமுகவிடம் பதற்றம் தெரிகிறது – தமிழிசை செளந்தரராஜன் கருத்து
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்
சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “கரூரில் திமுக முப்பெரும் விழாவா அல்ல முப்பொய்கள் விழாவா என கேட்கும்வகையில் இருந்தது. ஏதோ மத்திய அரசு கொடுமைப்படுத்தி கொண்டு இருப்பது போலவும், தமிழகத்தில் உரிமைகள் பறிபோய் கொண்டு இருப்பதாக போலவும், தமிழகத்திற்கு உரிமையை திமுகதான் வாங்கி தருவது போலவும், ஒரு மாய தோற்றத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

திமுக ஆட்சியை தொடர விடமாட்டோம்

மத்திய அரசு ரூ.127 கோடி உள்ளாட்சி அமைப்புகளுக்காக விடுவித்து உள்ளது. ஆனால் திமுக உள்ளாட்சி தேர்தல்களை நடத்தியதா? கிராம மக்களின் உரிமைகளை திமுக பறித்து கொண்டு இருக்கிறது. மாநில உரிமை பற்றி திமுக பேசுகிறது. என்ன திணிப்பு, என்ன அடக்குமுறை நடக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத திமுக ஆட்சியை தொடர விடமாட்டோம். ஊழல் மலிந்து இருக்கிற திமுக ஆட்சியை தொடர விடமாட்டோம். 2026ல் ஆண்டு திமுக ஆட்சியை நிச்சயமாக தொடர விடமாட்டோம்.

பா.ஜ.க.விடம் அதிமுகவை அடமானம் வைத்து விட்டதாக கூறுகிறீர்கள். ஆனால் ஜனநாயக முறைப்படி கருத்துகளை பரிமாறி கொள்கிறோம். அவசர நிலையை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியுடன் தானே இருக்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியிடம் திமுக அடிமைப்பட்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுகவிடம் அடிமைப்பட்டு இருக்கிறதும், கூட்டணியை விட்டு வெளியே வருவோம் என்று சொல்லும் துணிச்சல் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சண்முகத்திடம் இருக்கிறதா?” என கேள்வி எழுப்பினார்.

தமிழ் இன விரோதி திமுக தான்

தொடர்ந்து பேசிய அவர், “போராட்டம் செய்துவிட்டு ஏன் ஆளும் கட்சியிடம் கூட்டணியில் உள்ளீர்கள். திமுக முப்பெரும் விழாவில் பொய் பிரச்சாரம் நடந்து உள்ளது என்பதை மக்கள் உணர்ந்து உள்ளார். திமுகவை வீழ்த்த கூடிய காலம் வந்துவிட்டது. திமுக மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. போக்குவரத்து ஊழியர்களுக்காக போராட கம்யூனிஸ்ட் கட்சி முடியுமா? ஆணவக்கொலைகளை தடுக்க வேண்டும் என செல்வப்பெருந்தகை சொல்கிறார். யாருடன் உட்கார்ந்து கொண்டு சொல்கிறீர்கள். முரண்பாட்டான திமுக ஆட்சி வீட்டிற்கு அனுப்பப்பட வேண்டும்.

அதிமுக-பா.ஜ.க. உறவு சுமூகமாக உள்ளது. கச்சத்தீவை சுய நலத்திற்காக தாரை வார்த்துவிட்டனர். தமிழ்நாட்டின் உரிமையை எடுத்து இலங்கைக்கு தந்தார்கள். தமிழ்நாடு உரிமையை பாதுகாக்க வேண்டியது நாங்கள் தான். தமிழ் இன விரோதி திமுக தான். தமிழன் துணை ஜனாதிபதியாக வர ஆதரவு கொடுக்க முடியாத தமிழ் விரோதி திமுக. சமூகநீதிக்கு விரோதி திமுக. முப்பெரும் விழாவில் திமுகவிடம் பதட்டம் தெரிகிறது.

துணை முதல்வரால் எதுவும் செய்ய முடியாது

அமித்ஷாவை சந்தித்துவிட்டு கர்ச்சீப்பால் முகத்தை முடிக்கொண்டு எடப்பாடி பழனிசாமி கருத்து சொல்ல முடியாது. அவர்களுக்கு எல்லாம் ஒரு பாணி இருக்கும். அமித்ஷாவை சந்தித்துவிட்டு புகைப்படத்தை வெளியிட்ட பின்னர் ஏன் மறைக்கணும். துணை முதல்வரால் எதுவும் செய்ய முடியாது. 2026ம் ஆண்டு வரை தான் துணை முதல்வராக இருக்க முடியும்” என தெரிவித்தார்.