அரசியல்

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்

“பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்ட வேண்டும்” என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.. நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்
Nainar Nagendran
நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த ஹோப் பார்க் பகுதியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார் (50), 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

'குட் டச், பேட் டச்' விழிப்புணர்வு வகுப்புக்குப் பின், 12 வயது மாணவி அளித்த புகாரைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளிவந்தது. இதனைத்தொடர்ந்து, உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “ஊட்டி அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஒருவர் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவந்துள்ள செய்திகள் மனதை உலுக்குகின்றன.

மாணவிகள் புகார் அளித்த பின் தற்போது ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுவிட்டது சிறு ஆறுதல் அளித்தாலும், பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை எனும் கசப்பான உண்மை மனதை வாட்டி வதைக்கிறது.

படிக்கும் மாணவச் செல்வங்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடும் தைரியம் அந்த ஆசிரியருக்கு எப்படி வந்தது? திமுக ஆட்சியில் சீரழிந்து வரும் சட்டம் ஒழுங்கால் குற்றங்களின் கூடாரங்களாக பள்ளிக்கூடங்களே மாறி வரும் அவல நிலை மிகவும் கொடூரமானது.

நான்காண்டு ஆட்சியின் விளம்பரங்களில் மட்டும் ஆர்வம் காட்டும் தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின், நாளைய எதிர்காலத்தைத் தீர்மானிக்க வல்ல பள்ளிக்கூடங்களில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ஆர்வம் காட்ட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.