அரசியல்

“அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்

அடக்குமுறைக்கும், ஆதிக்கத்துக்கும் தமிழ்நாட்டில் இடம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 “அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல்
எடப்பாடி பழனிசாமி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கரூர் மாவட்டம், கோடாங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று ( செப்.17) மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“கடந்த அ.தி.மு.க. ஆட்சியைக் காப்பாற்றியதே பா.ஜ.க.தான்” என்று உண்மையைப் பேசியிருக்கிறார்! அந்தக் கைப்பாவை அரசை, தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறியத் தி.மு.க.தான் காரணம் என்று நம்மீது வன்மத்தை கொட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.அதனால்தான், தொடர்ந்து நமக்கு இவ்வளவு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைப் பார்த்து பயந்து முடங்கிவிடுவோம் என்று நினைத்தார்கள். தி.மு.க. என்ன மிரட்டலுக்கு பயப்படுற கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு மாநிலக் கட்சி, ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர்கள் நாம்.

சிலருக்கு வயிறு எரிகிறது

75 ஆண்டுகால ஹிஸ்டரி இருக்கிறது நமக்கு. அதற்குப் பிறகு, தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்த அனைத்து கட்சிகளுமே - “தி.மு.க.வை அழிப்போம் – ஒழிப்போம்” என்று சொன்னார்கள்! இப்போதும், சிலபேர் பேசிக் கொண்டிருக்கிறார்களே... ”தி.மு.க.விற்கு நாங்கள்தான் மாற்று” என்று... என்ன மாற்றப்போகிறார்கள்? தமிழ்நாட்டின் வளர்ச்சியை மாற்றி, பின்னால் இழுத்துச் செல்லப்போகிறார்களா? நம்முடைய கொள்கைகளைவிடச் சிறந்த கொள்கைகளை யாராவது பேசுகிறார்களா? மாற்றம்... மாற்றம் என்று சொன்ன அனைவரும் மாறினார்கள்... மறைந்து போனார்கள்... ஆனால், தி.மு.க. மட்டும் மாறவில்லை! தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்து என்றைக்கும் மறையவில்லை! இதுதான் தமிழ்நாடு பாலிட்டிக்ஸ்! நம்முடைய கொள்கைதான் நம்முடைய பலம்! நாம் செய்ய வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது.

இந்தியாவிலேயே டபுள் டிஜிட் பொருளாதார வளர்ச்சியை எட்டியிருக்கும் ஒரே மாநிலம் எது என்று கேட்டால், “தமிழ்நாடு” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் அளவுக்கு, முதன்மை மாநிலமாக முன்னேற்றி இருக்கிறோம்.இதனால்தான், நம்முடைய திராவிட மாடல் அரசைப் பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள். அவர்களின் கண்ணீர் - ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர்.


அடிமையிஸமாக மாற்றியவர் இபிஎஸ்

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோது எதையும் செய்யாமல், தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் தெம்போ - திராணியோ இல்லாமல், அடிமை சாசனம் எழுதி கொடுத்தார். பா.ஜ.க தன்னுடன் இருக்கிறது என்று இப்போதும் வாய்த் துடுக்கோடு பேசி வருகிறார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து, என்னை ஒருமையில் பேசிக்கொண்டு இருக்கிறார்! கொள்கையில்லாமல் தொடைநடுங்கும் பழனிசாமியின் தரத்தை மக்களே எடை போட்டுக்கொள்வார்கள் என்று நானும் விட்டுவிட்டேன். ரெய்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அ.தி.மு.வை அடகு வைத்திருக்கிறார். “திராவிடம் என்றால் என்ன?” என்று கேட்டபோது, அதெல்லாம் தனக்குத் தெரியாது என்று சொன்ன அவர், அதிமுக தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். அதுதான் வெட்கக்கேடு அ.தி.மு.க. தொடங்கியபோது தங்களின் கொள்கை, ‘அண்ணாயிஸம்’ என்று சொன்னார்கள். அதை இப்போது பழனிசாமி ‘அடிமையிஸம்’ என்று மாற்றி, ‘அமித்ஷாவே சரணம்’ என்று மொத்தமாக சரண்டர் ஆகிவிட்டார். “முழுமையாக நனைந்த பின்னர் முக்காடு எதற்கு?” என்று கேட்பார்கள். அதைப்போல நேற்று டெல்லியில் கார் மாறி மாறிப் போன பழனிசாமியைப் பார்த்து “காலிலேயே விழுந்த பின்னர் முகத்தை மூட கர்ச்சீப் எதற்கு?” என்று கேட்கிறார்கள். இதில் அவரின் தரம்தாழ்ந்த பேச்சுக்கெல்லாம் நாம் பதில் சொல்ல வேண்டுமா? ஆனால், மக்களாட்சியில் மக்களுக்கு மதிப்பளித்து பதிலளிக்க வேண்டிய பொறுப்பும் – கடமையும் நமக்கு இருக்கிறது.

அதிகாரத்துக்கான போராட்டம் அல்ல

தலைமுறை தலைமுறையாக நாம் போராடி, எத்தனையோ பேர் உயிரையே தியாகம் செய்து பெற்றுத் தந்த உரிமைகள் அனைத்தும், நம் கண் முன்னே பறிபோக அனுமதிக்கலாமா? பா.ஜ.கவை இப்போதே நாம் தடுத்து நிறுத்தவில்லை என்றால், அடுத்து, மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கித்தான் நகருவார்கள். ஏற்கனவே, காஷ்மீரில் அதற்கு ட்ரையல் பார்த்துவிட்டார்கள். எப்படி, இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்று ஒரு நிலை உருவானபோது, தமிழ்நாடு போராடி, மொழிப்போர் நடத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் காப்பாற்றியதோ, அதேபோன்று இப்போது ஒரு உரிமைப்போரை நடத்தி நாட்டைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை நமக்கு இருக்கிறது. இப்போது நாம் முன்னெடுக்கும் போராட்டம் ஒரு கட்சிக்கான போராட்டமோ - முதலமைச்சர் என்ற பொறுப்புக்கான போராட்டமோ - ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டமோ அல்ல.இது தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்குத் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். இந்தக் கரூர் மண்ணில் நின்று, தந்தை பெரியார் பிறந்தநாளில் உரக்கச் சொல்வோம்... “தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்!” டெல்லிக்குக் கேட்பது போன்று, அனைவரும் சேர்ந்து சொல்ல வேண்டும். “தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!”என தெரிவித்தார்.