அரசியல்

எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

தமிழகத்தில் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது என்றும், ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார் என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது.. அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்
Durai murugan and Edappadi palaniswami
வேலூர் மாவட்டத்தில் பேருந்துகள் செல்லாத கிராமங்களுக்கு புதிய மற்றும் மாற்றி அமைக்கப்பட்ட வழித்தடங்கள் உள்பட மொத்தம் 18 வழித்தடங்களுக்கான 18 மினி பேருந்துகளை நீர்வளத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்பொழுது பேசிய அமைச்சர், "அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவிக்கிறது. அதனை அரசு அதிகாரிகள் அனைத்து பகுதிகளுக்கும் சென்றடையும் வகையில் செயல்படுத்தப்பட வேண்டும். எந்த ஒரு திட்டமாக இருந்தாலும் அதனை அனைவருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும். மினி பேருந்துகள் தொடக்க விழா குறித்து எனக்கு அரசு அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. தெரிவித்து இருந்தால் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்து வசதி கிடைக்க நடவடிக்கை எடுத்து இருப்பேன். இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்கக்கூடாது" என்று அதிகாரிகளை எச்சரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன், "நந்தன் கால்வாய் திட்டத்திற்கு முதல் கட்டமாக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் துவக்கப்படும் என்று அவர் கூறினார்.

பெண்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என்ற கேள்விக்கு, "எந்த நாடாக இருந்தாலும் வளர்ந்த சமுதாயத்தில் குற்றங்கள் நிகழ்வது அதிகம். ஆனால் குற்றங்களை கண்டுபிடித்து தடுத்தால் தான் அது நல்ல அரசு. அதனைத் தான் தமிழக அரசு செய்து வருகிறது" என்றார்.

தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட ரூ.2000 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியும் ஒரு அணைக் கூட கட்டவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றும் தெரியாது. பாலாற்றில் கூட பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் பல அணைகள் கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மேலும் பல தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. ஏதோ பேச வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்" என்று கூறினார்

தமிழகத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறதே என்ற கேள்விக்கு, "தூத்துக்குடியில் லட்சக்கணக்கானோர் மத்தியில் துப்பாக்கி சூடு நடந்தது. அது திமுக ஆட்சியா?
அதிமுக ஆட்சியில் தான் துப்பாக்கி சூடு கலாச்சாரம் இருந்தது" எனத் தெரிவித்தார்.