அரசியல்

"எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, துரோகி"- முதல்வர் ஸ்டாலின் கடும் தாக்கு!

"எடப்பாடி பழனிசாமி விவசாயிகளுக்குச் துரோகம் மட்டுமே செய்துள்ளார்" என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.


Edappadi Palaniswami and CM Stalin
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஆகியோரைச் சரமாரியாக விமர்சித்தார்.

எடப்பாடி பழனிசாமி மீதான விமர்சனங்கள்

இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "எடப்பாடி பழனிசாமி பச்சைத் துண்டை அணிந்துகொண்டு விவசாயிகளுக்குப் பச்சைத் துரோகம் செய்வதாக விமர்சித்தபோது அவருக்குக் கோபம் வந்தது. இப்போதும் சொல்கிறேன், அவர் விவசாயிகளுக்குச் செய்தது துரோகம் மட்டுமே. "எடப்பாடி பழனிசாமி விவசாயி அல்ல, உழவர்களுக்குத் துரோகம் செய்யும் துரோகி.

மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் எனச் சொல்லிக் கொள்ளும் பழனிசாமி, ஈரோட்டிற்கு என்ன செய்தார்?. பல கார்கள் மாறி, யார் யாரையோ எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். பிரதமரைச் சந்தித்து நெல் ஈரப்பதம் தொடர்பாகக் கோரிக்கை விடுத்தாரா? விவசாயிகளுக்காகப் பேசச் செல்கிறார் என்றால், நானே கார் ஏற்பாடு செய்து தருகிறேன். முதுகெலும்பை இழந்து கர்ச்சீப்பைப் முகத்தில் வைத்துச் சுற்றுவதால் தான் எடப்பாடி பழனிசாமிக்குப் பத்து தோல்வி பழனிசாமி என்ற பெயரை மக்கள் கொடுத்துள்ளனர்" என்று ஸ்டாலின் கிண்டலாகப் பேசினார்.

ஆளுநர் ஆர்.என். ரவி மீதான குற்றச்சாட்டுகள்

"தமிழகத்தின் வளர்ச்சியை நிரந்தரமாகக் கெடுக்க வேண்டும் என ஒருவர் நினைக்கிறார், அவர்தான் ஆளுநர் ஆர்.என். ரவி. அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டை பயங்கரவாதிகள் உலவும் இடமாக சித்தரிக்க முயற்சிக்கிறார். ஆளுநர் இருக்கும் அரசியல் சாசன பொறுப்புகளுக்கு துளியும் பொருத்தமற்ற தகுதியற்ற செயல் இது. கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் தொடங்கும் மசோதாவுக்கு அனுமதி தராமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். தமிழ் மொழியைப் பற்றி தமிழ்நாட்டுக்கு பாடம் எடுக்க வேண்டாம். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் நாங்கள்.

மத்திய ஆட்சியில் பஹல்காம் தாக்குதல், டெல்லி குண்டுவெடிப்பு போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாடு எதைக் கேட்டாலும் தரக் கூடாது என்பதைக்காகவும் இருப்பதாகவும், தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும் அளுநரை மத்திய அரசு நியமித்திருக்கிறது" என்று அவர் குற்றம் சாட்டினார்.