அரசியல்

முதலமைச்சரை விமர்சிப்பது அரசியல் உள்நோக்கமுடையது - திருமாவளவன்

நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம் என திருச்சி விமான நிலையத்தில் திருமாவளவன் பேட்டி

 முதலமைச்சரை விமர்சிப்பது அரசியல் உள்நோக்கமுடையது - திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பேட்டி


அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விசிக தலைவரும், சிதம்பரம் எம்.பியுமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வருகை தந்தார்.அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ நிதி ஆயோக் கூட்டங்களில் தமிழக முதல்வர் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம்.அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை, தமிழ்நாடு மாநிலத்திற்கு வழங்க வேண்டிய நிதியை கேட்டு பெறவும்,நிலுவையில் இருக்கக்கூடிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டியது முதலமைச்சருக்கு இருக்கக் கூடிய பொறுப்பு கடமை.

எதேச்சு அதிகாரப் போக்கு

பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு, ஆளுநர் மூலமாக நெருக்கடி தருவது என்பதை தாண்டி, அந்த மாநிலங்களுக்கு முறையாக வழங்க வேண்டிய நிதியையும் தருவதில்லை, ஒரு தேக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. திட்டமிட்டே இதை செய்கிறார்கள்.தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த தவறுவதால் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை தர மாட்டோம் என அடம் பிடிக்கிறார்கள். இது ஒரு எதேச்சு அதிகாரப் போக்கு. இவ்வாறு தடுத்து வைத்திருப்பதை தமிழக அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். இது தமிழக மக்கள் நலனுக்கு உகந்த அணுகுமுறை.இதை விமர்சிப்பது முற்றிலும் அரசியல் உள்நோக்கமுடையது

அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கும் பொழுது எதையும் காரணமாக சொல்லலாம். பாஜக திமுகவோடு நெருங்கி விடக்கூடாது நல்ல இணக்கத்தை உருவாக்கி விடக்கூடாது என்கிற பதட்டம் அதிமுகவிடம் வெளிப்படுகிறது. திமுக மதச்சார்பற்ற கூட்டணியை தலைமை தாங்கி நடத்தும் பொழுது அத்தகைய வரலாற்றுப் பிழையை செய்யாது என்பது தமிழக மக்கள் உணர்ந்த உண்மை. அது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும், ஆனால் திமுக மீது ஒரு சந்தேகத்தை எழுப்ப வேண்டும் என்பதற்காக இந்த விமர்சனத்தை முன்வைக்கிறார்.

கீழடி ஆய்வறிக்கை

கீழடி ஆய்வறிக்கை என்பது கற்பனையான ஒன்று அல்ல, இட்டு கட்டி எழுதப்பட்ட ஒன்று அல்ல, வரலாற்று தரவுகளுக்கு முரணானவை அல்ல, அதில் என்ன ஐயம் இருக்கிறது, அதில் முரணான தகவல் இருக்கிறது என்பதை அவர்கள் வெளிப்படையாக சொல்ல வேண்டும். அவ்வாறு இன்றி அதனை திருப்பி அனுப்பி திருத்தம் செய்து அனுப்புங்கள் என்று சொல்வது எந்த அளவிற்கு தமிழர் தொன்மை குறித்த புரிதலில் அவர்கள் பின்தங்கி இருக்கிறார்கள் அல்லது காழ்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. தற்காலிகமாக ஒரு தேக்கத்தை ஏற்படுத்தலாம், ஆனால் வரலாறு என்றைக்கும் வரலாறுதான்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் புதையுண்டு போன தமிழர் தொன்மையும், தமிழர் நாகரிகமும் இப்போது வெளிச்சத்திற்கு வருகிறது. ஆகவே புதையுண்டது புதையுண்டதாகவே இருந்துவிடாது.அது மீண்டும் வெளிச்சத்திற்கு வரும் என்பதற்கான சான்றுதான் கீழடி.தமிழர்கள் சாதியற்றவர்கள், மதமாற்றவர்கள் என்பதை உலக மாந்தர்களுக்கு வழிகாட்டும் வகையில் தனி திறன் பெற்றவர்கள் என்பதற்கான பல்வேறு தரவுகள் கிடைத்து வருகிறது. அதற்கு கீழடி முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை வட இந்திய புராணத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களால், போலியான கதையாடல் மீது நம்பிக்கை கொண்டவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஆபாச தளங்களுக்கு கட்டுப்பாடு

கீழடி அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை.இருந்தாலும் வட இந்தியர்கள் வேண்டுமென்றே தங்களது காழ்ப்புணர்வை வெளிப்படுத்தும் வகையில் இத்தகைய போக்கை கடைபிடிக்கிறார்கள்.மீண்டும் மீண்டும் யார் என்பதை அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். இந்தியின் மீது அவர்களுக்கு இருக்கும் வெறியை, அதை இந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிக்கும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஒரு மொழி, ஒரு நாடு என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு ஏற்புடையது அல்ல, யுபிஎஸ்சி தேர்வு மையங்களில் ஆங்கில அறிவிப்பு இல்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சாதியை ஒழிப்பதற்கு சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்? வெறுமன திமுக மீது குற்றச்சாட்டு வைப்பதற்காக பேசுகிறாரா என்பது குறித்து விளக்கம் தேவை அப்படி அதிக அளவிலான சாதிகள் முரண் இருக்குமானால், அதை ஒழிக்க மத்திய அரசும் அவர் சார்ந்திருக்கின்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் என்ன செய்யப்போகிறது என்பது குறித்த அறிக்கை வெளியிட வேண்டும்.எல்லா ஆபாச தளங்களும் யார் வேண்டுமானாலும் பயன்படுத்தும் சூழலில் உள்ளது. அதற்கு எந்த ஒரு கட்டுப்பாடும் மத்திய அரசு விதிக்காமல் உள்ளது. அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவ வயதை எட்டாத டீன் ஏஜ் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது” என தெரிவித்தார்.