இந்தியா

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!

கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 3 பேர் கைதாகியுள்ள நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டக்கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4-வது நபர் கைது!
Kolkata Law College Student Rape case Fourth Accused Security Guard Arrested
கொல்கத்தாவில் 24 வயது சட்டக் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 25 அன்று நடந்த இந்த சம்பவத்தின் முழு விவரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் காவல்துறை விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 9 ஆம் தேதி ஆர்.ஜி.கர்.மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்காளம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் சுவடுகள் மறைவதற்கு முன்பாகவே மற்றுமொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்தேறியுள்ளது.

கல்லூரியின் பாதுகாவலர் கைது:

தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் கடந்த புதன்கிழமை 24 வயது சட்டக் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பாக ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகிய இரண்டு மாணவர்களும், சட்டக்கல்லூரியின் ஊழியர் மோனோஜித் மிஸ்ரா என 3 பேர் வியாழக்கிழமையன்று கைது செய்யப்பட்ட நிலையில், இன்று கல்லூரியின் பாதுகாவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் விவரம்:

தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக பணிப்புரிந்து வருபவர் மோனோஜித் மிஸ்ரா. இவர் புதன்கிழமை மாலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தனியாக பேச வேண்டும் என கூறியுள்ளார். அப்போது திருமணம் செய்துக்கொள்ள விரும்புவதாக, அந்த பெண்ணிடம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், தனக்கு ஏற்கெனவே ஒரு காதலன் இருப்பதாக கூறி மிஸ்ராவின் வேண்டுக்கோளினை நிராகரித்துள்ளார். இதனையடுத்து மிஸ்ரா, கல்லூரி மாணவர்களான ஜைப் அகமது, பிரமித் முகர்ஜி ஆகியோரின் உதவியுடன் கல்லூரி மாணவியை வலுக்கட்டாயமாக அங்கிருந்த காவலாளியின் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

காவலாளியே வெளியே இருக்குமாறு சொல்லிவிட்டு, மாணவியின் ஆடைகளை அவிழ்த்து அதை போனில் படம்பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மிஸ்ரா அந்த மாணவியை பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. நடந்த விவரத்தை வெளியில் தெரிவித்தால், வீடியோ லீக் செய்யப்படும் என மிரட்டியுள்ளனர். இதற்கு மத்தியில் தப்பிக்க முயன்ற கல்லூரி மாணவியை ஹாக்கி ஸ்டிக் போன்றவற்றால் தாக்கியும் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு அடுத்த நாள் பாதிக்கப்பட்ட பெண், தன் குடும்பத்தினரிடம் நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். கஸ்பா காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் தான் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உடலில் பலத்த காயம்:

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. NDTV-க்கு கிடைத்த மருத்துவ அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் சிராய்ப்புகள் உள்ளிட்ட பல உடல்ரீதியான தாக்குதலுக்கான காயங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அரசியல் தொடர்புடையவரா?

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு நிர்வாகியாக இருந்தவர் என கூறப்படுகிறது. தற்போது அவர் எங்கள் கட்சியுடன் தொடர்பில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் ஆளும் அரசுக்கு இந்த வழக்கில் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் கல்லூரியின் பாதுகாப்பு காவலரின் அறையையும், அதனுடன் இணைந்திருந்த மாணவர் சங்க அலுவலகத்தையும் காவல்துறை விசாரணைக்காக சீல் வைத்துள்ளது. வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் வெள்ளிக்கிழமை அலிப்பூரில் உள்ள கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அவர்களை ஜூலை 1 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்தாண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்ற பொதுதேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், மாநிலத்தில் தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.