இந்தியா

எண்ட மோனே ஹேப்பியோ? அங்கன்வாடியில் இனி முட்டை பிரியாணி!

3 வயது சிறுவன் வைத்த கோரிக்கையினை ஏற்று கேரளாவிலுள்ள அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் அம்மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

எண்ட மோனே ஹேப்பியோ? அங்கன்வாடியில் இனி முட்டை பிரியாணி!
Kerala Anganwadi Meals change- announcement by minister veena george
கேரள அரசு, நடப்பாண்டு அங்கன்வாடியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை திருத்தியமைத்துள்ளது. இதற்கு ஒரு வகையில் 3 வயது சிறுவனும் காரணம் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

சமூக வலைத்தளங்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு சிறுவனுக்கு அவரது அம்மா உணவு ஊட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியது. அதற்கு காரணம் வைரலான அந்த வீடியோவில், மழலை குரலில் 'அங்கன்வாடியில் பிரியாணியும், பொரிச்ச கோழியும் போட சொல்லுங்க' என தன் அம்மாவிடம் 3 வயது குழந்தை கோரிக்கை வைத்தது தான்.

திரிஜல் எஸ் சுந்தர் என்கிற அந்த சிறுவனை அவரது பெற்றோர்கள் சங்கு என செல்லமாக அழைப்பதுண்டு. ஜனவரி 26 அன்று தனது, வீட்டில் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, சங்கு தனது அம்மாவிடம், "அங்கன்வாடியில் எனக்கு உப்புமாவுக்குப் பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை (பொரிச்ச கோழி) வேண்டும்" என்று சொல்லியதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் சங்குவின் தாயார்.

இந்த வீடியோ அவரது குடும்பத்தினர் எதிர்பாராத வகையில் வைரலாகியது. எந்தளவிற்கு வைரலாகியது என்றால், கேரள மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இந்த வீடியோவைப் பகிரும் அளவிற்கு. வீடியோவினை பகிர்ந்த அமைச்சர், “சங்குவின் பரிந்துரைகளை அரசு பரிசீலனை செய்யும் என்றும், அங்கன்வாடிகளில் உணவுப் பட்டியல் திருத்தப்படும்” என்றும் அப்போது அறிவித்தார்.

அங்கன்வாடியில் புதிய மெனு அறிவிப்பு:

இந்நிலையில் கோடைக்கால விடுமுறை முடிந்து பள்ளிகள், அங்கன்வாடிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. நேற்றையத் தினம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அங்கன்வாடிகளுக்கான புதிய கல்வியாண்டை தொடங்கி வைத்தபோது, அமைச்சர் வீணா ஜார்ஜ் சிறுவன் சங்குவிற்கு அளித்த தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார். அங்கன்வாடியில் வழங்கப்பட உள்ள புதிய உணவுப் பட்டியலை வெளியிட்டார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில், " கேரள மாநிலத்தில் அங்கன்வாடிகளில் ஒரு ஒருங்கிணைந்த மெனு முதல் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது. பல்வேறு மட்டங்களிலுள்ள அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்து இந்த புதிய மெனு தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இனி அங்கன்வாடிகளில் முட்டை பிரியாணி மற்றும் புலாவ் ஆகியவை வழங்கப்படும். சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்ளும் அளவினை குறைப்பதன் மூலம் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த இயலும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

வாரத்தில் இரண்டு நாட்கள் பால் மற்றும் முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது வாரத்திற்கு மூன்று நாட்கள் பால் மற்றும் முட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது” என அமைச்சர் வீணா ஜார்ஜ் குறிப்பிட்டுள்ளார்.



கேரளாவில் சுமார் 33,000 அங்கன்வாடிகள் உள்ளன. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் மாநில அரசு குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் பால் மற்றும் முட்டை வழங்குவதற்கான திட்டத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கேரள அரசு, ஸ்மார்ட் பள்ளி போன்று மாநிலத்திலுள்ள அனைத்து அங்கன்வாடிகளையும் “ஸ்மார்ட் அங்கன்வாடிகளாக” மாற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளது.

வகுப்பறை, ஓய்வறை, சமையலறை, உணவுக்கூடம், தோட்டம், உட்புற மற்றும் வெளிப்புற விளையாட்டுப் பகுதிகள் ஆகியன ஸ்மார்ட் அங்கன்வாடியில் இடம்பெற உள்ளது. அங்கன்வாடியினை நிர்வகிப்பதில் 95% பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.