இந்தியா

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி.. DGCA அதிரடி உத்தரவு

ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உத்தரவு பிறப்பித்துள்ளது.

அகமதாபாத் விமான விபத்து எதிரொலி.. DGCA அதிரடி உத்தரவு
DGCA அதிரடி உத்தரவு
குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி மதியம் 1.38 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தின் மீது விழுந்து வெடித்துச் சிதறி பெரும் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சிக்கிய 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 டிரீம்லைனர்' விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர்.

இந்த விமான விபத்தைத் தொடா்ந்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் உள்பட பல்வேறு துறையினர் விரைந்து வந்து விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, சில மணி நேரங்களில் அகமதாபாத் விமான நிலையத்தில் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

விபத்தில் 2 விமானி உட்பட 241 பேர் உயிரிழந்ததாகவும், பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்ததாகவும் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு கோடி நிவாரணம் வழங்கப்படும் என டாடா குழும தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தின் எதிரொலியாக, ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானங்களுக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) புதிய ஆய்வு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.இந்த புதிய வழிகாட்டுதல்கள் ஜூன் 15 திங்கட்கிழமை முதல் கட்டாயமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரீம்லைனர் விமானங்கள் GEnx எஞ்சின்களைப் பயன்படுத்துகின்றன. இந்த விமானங்களில் ஹைட்ராலிக் சோதனை உள்பட 6 வகையான சோதனைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. எரிபொருள் தொட்டிகள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் செயல்பாட்டை சரிபார்த்து உறுதி செய்ய DGCA அறிவுறுத்தியுள்ளது.

ஏர் இந்தியாவின் 26 போயிங் 787-8 மற்றும் ஏழு போயிங் 787-9 விமானங்கள் அனைத்தும் ஜூன் 15 முதல் இந்தியாவில் இருந்து ஒரு விமானம் புறப்படுவதற்கு முன் ஒருமுறை சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் குறித்து அவ்வப்போது DGCA க்கு அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.