இந்தியா

கோயிலுக்குள் 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் கைது!

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை, பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோயிலுக்குள் 5 வயது சிறுமியிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் கைது!
5 yr old girl was raped inside the temple
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் அமைந்துள்ள ஜெகதீஷ்புரா பகுதியில் கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்தச் சம்பவம் மே 18 ஆம் தேதி நடந்ததாக சிறுமியின் பாட்டி தெரிவித்தார்.

ஜெகதீஷ்புரா பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர், ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை கோயிலுக்குள் அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த குழந்தையினை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

வலியில் துடித்த சிறுமி கத்தியபோது அவரது வாயைப் பொத்தியுள்ளான். சிறுமியின் அலறல் சத்தத்தை கேட்டு அவரது பாட்டி, சிறுமியினை தேடி அழைந்த போது கோயிலுக்குள் நுழைந்தார். பாட்டி வருவதை அறிந்ததும், பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட நபர் தப்பிக்க முயன்றுள்ளான். வழிமறித்த பாட்டியினை தள்ளிவிட்டு ஓடியுள்ளார்.

பாட்டி கூக்குரலிட, அக்கம் பக்கத்தினர் குற்றவாளியை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். அதன்பின் அவனை போலீசிடம் ஒப்படைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர் மீது பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு பதியாமல், அவரது மனநலப் பிரச்சினையைக் காரணம் காட்டி போலீசார் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட நபரை விடுவித்துள்ளனர்.

ஆனால், சிறுமியின் குடும்பத்தினர் பாலியல் வன்புணர்வில் அந்த நபர் ஈடுபட்டார் என தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தனர். சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையினை தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட அந்த நபரை, மே 26 அன்று மீண்டும் கைது செய்தனர். அவர் மீது பாலியல் வன்புணர்வு தொடர்பான விதிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட பவித்ரா என்கிற பம்மி கடந்த திங்கட்கிழமை சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது மேற்கொண்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இப்போது இந்த பாலியல் வன்புணர்வு வழக்கு விவாதங்களை கிளப்பியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் அல்ல என சிறுமியின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. காவல்துறையோ அவர் மனநலம் சரியில்லாதவர் என கூறுகிறது. உண்மையினை கண்டறிந்து, குற்றத்தில் ஈடுபட்ட நபருக்கு அதிகப்பட்ச தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.