சினிமா

அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு- நீலம் புரொடக்ஷன்ஸ்

“சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் மரணம் எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு” என்று நீலம் புரொடக்ஷன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு- நீலம் புரொடக்ஷன்ஸ்
Neelam Productions
நாகை மாவட்டம், கீழையூர் விழுந்தமாவடியில் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 13 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது கார் சேசிங் காட்சியில் நடித்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் (52), கார் மூன்று முறை உருண்டதில் மயக்கமடைந்தார். உடனடியாக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நீலம் புரொடக்ஷன்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “கடந்த ஜூலை 13 ஆம் தேதி காலை நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான மோகன் ராஜை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள், குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது.

எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துகள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம்.

ஆனால், அந்த நாள் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.

செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம்.

இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.