சினிமா

"நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை.. மிரட்டலின் பேரில் திருமணம் நடந்தது”- மாதம்பட்டி ரங்கராஜ்

"மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை" என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார்.


Madhampatty rangaraj
தன்னைத் திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக சமையல் கலை நிபுணரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், குழந்தையின் தந்தை தான் என ஒப்புக்கொண்டதாக வெளியான தகவலுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜாய் கிரிசில்டாவின் குற்றச்சாட்டு

மாதம்பட்டி ரங்கராஜுடனான உறவில் தனக்குப் பிறந்த ஆண் குழந்தைக்குத் தந்தையை மறைத்துவிட்டதாகக் கூறி, ஜாய் கிரிசில்டா அவர் மீது புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டார்.

அதில், "தன்னை இரண்டாவது திருமணம் செய்ததை மகளிர் ஆணையத்தின் முன் மாதம்பட்டி ரங்கராஜ் ஒப்புக் கொண்டார்" என்றும், "எனது குழந்தையின் தந்தை நான் தான் என ரங்கராஜ் ஒப்புக் கொண்டதால், டி.என்.ஏ ஆதாரங்கள் தேவையில்லை என்றும், வழக்கு முடியும் வரை குழந்தை பராமரிப்புக்கு மறுக்கக் கூடாது என்றும் மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது" என்றும் ஜாய் கிரிசில்டா தெரிவித்திருந்தார்.

மாதம்பட்டி ரங்கராஜ் மறுப்பு

இந்தக் குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்து மாதம்பட்டி ரங்கராஜ் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருமணம் மிரட்டலால் நடந்தது: "மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை. நான் ஜாய்யை தன்னிச்சையாக (under free will) திருமணம் செய்து கொண்டதாக ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை" என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். ஜாய், தன்னை அவதூறு செய்வதற்காகத் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டியதால், இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் நடந்தது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பணம் பறிக்கும் நோக்கம்: "இந்தத் திருமணம் மிரட்டலின் பேரில் கட்டாயப்படுத்தப்பட்டு, என்னிடமிருந்து பணம் பறிக்கும் ஒரே நோக்கத்துடன் செய்யப்பட்டது என்பதை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தின் புலனாய்வு அதிகாரி முன்பும், சென்னை உயர் நீதிமன்றத்திலும் செப்டம்பர் 2025-இல் அளித்த வாக்குமூலங்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன்."

பராமரிப்புத் தொகைக் கோரிக்கை: மகளிர் ஆணையத்தின் முன் நடந்த விசாரணையின்போது, ஜாய் தனக்கு மாதத்திற்கு ரூ. 1,50,000 பராமரிப்புத் தொகையாகவும், தனது பி.எம்.டபிள்யூ (BMW) காருக்கு ரூ.1.25 லட்சம் மாதாந்திர இ.எம்.ஐ.யையும் செலுத்த வேண்டும் என்று கோரினார். தான் அந்தக் கோரிக்கையை மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

டி.என்.ஏ பரிசோதனைக்கு ஒப்புதல்: "நான் ஒருபோதும் டி.என்.ஏ பரிசோதனையை மறுத்ததில்லை. அந்தக் குழந்தை என்னுடையது என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், குழந்தையை வாழ்நாள் முழுவதும் கவனித்துக் கொள்வேன் என்றும் ஏற்கனவே வாக்குமூலம் அளித்துள்ளேன்."

நீதிமன்றத்தில் மேல்முறையீடு

"மகளிர் ஆணையத்தின் பரிந்துரை உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த வாக்குமூலத்தையும் அளிக்கவில்லை. அந்தப் பரிந்துரை உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன்" என்றும், உண்மையைக் காவல்துறை மூலம் நிரூபிக்க அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பிப்பேன் என்றும் ரங்கராஜ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.