சினிமா

கழுகு பட நாயகனுக்கு இரண்டாவது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து

47 வயதாகும் நடிகர் கிருஷ்ணா எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுத்தொடர்பான புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

கழுகு பட நாயகனுக்கு இரண்டாவது திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து
Tamil actor krishna on getting married
திரையில் துருதுருவென வரும் நடிகர் கிருஷ்ணா தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத சில பாக்ஸ் ஆபிஸ் ஹிட்களை கொடுத்துள்ளார். கிருஷ்ணாவின் தந்தை திரைப்பட தயாரிப்பாளர் கே.கே.சேகர் ஆவார். மேலும், பில்லா,பட்டியல், அறிந்தும் அறியாமலும், சர்வம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த பிரபல திரைப்பட இயக்குனர் விஷ்ணுவர்தனின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார்.

முழுக்க முழுக்க திரை குடும்ப பின்னணி கொண்டவர் நடிகர் கிருஷ்ணா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்படத்தில் சிறுவனாக தன் முகத்தை திரையில் காட்டியவர், இருவர், சந்தோஷ் சிவனின் தி டிரேரிஸ்ட் போன்ற படங்களிலும் சிறுவனாக நடித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு வெளியான அலிபாபா திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்தார். இவரது நடிப்பு பரவலாக பாராட்டப்பட்டாலும் படம் வசூல் ரீதியாக தோல்வியினை சந்தித்தது. அதன் பிறகு 2010 ஆம் ஆண்டு கற்றது களவு என்கிற படத்தில் நடித்தார். அதுவும் பெரிதாக கைக்கொடுக்காத நிலையில், 2012 ஆம் ஆண்டு வெளியான கழுகு திரைப்படம் நடிகர் கிருஷ்ணாவை பட்டித்தொட்டி எங்கும் கொண்டு போய் சேர்த்தது.

கழுகு படத்தில் இடம்பெற்றிருந்த யுவனின் பாடல்களும், நடிகர் கிருஷ்ணாவிற்கு கதாநாயகனாக முதல் வெற்றியை பெற உதவியது என்றால் மிகையல்ல. 2014 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் 4 படங்கள் வெளியாகின. அதில் யாமிருக்க பயமேன் திரைப்படம் அந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் சூப்பர் ஹிட் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பட்டியலில் இணைந்தது. இதன்பின் சரியான ஹிட் ஒன்று கிடைக்காமல் தடுமாறி வருகிறார் நடிகர் கிருஷ்ணா.

இந்நிலையில் தான், மிக எளிமையான முறையில் இரண்டாவது திருமணம் செய்துள்ளார் நடிகர் கிருஷ்ணா. இதுத்தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கமெண்டில் தெரிவித்து வருகின்றனர்.



கிருஷ்ணா 2014 ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார், ஆனால் பின்னர் அவர்கள் விவாகரத்து பெற்றனர். ஹேமலதா 2015 ஆம் ஆண்டு, நடிகர் கிருஷ்ணாவும்- அவரது பெற்றோர்களும் வரதட்சனை கேட்டு துன்புறுத்துவதாக கோவை துடியலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது அப்போதைய காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.