கமலா என பெயர் மாற்றம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் கலந்து கொண்டுள்ளார்.
உலகின் மிக பெரிய ஆன்மிகம் மற்றும் கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா ஒவ்வொரு ஆண்டும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும். இந்த கும்பமேளா இன்று (ஜன 13) முதல் பிப்ரவரி 26-ஆம் தேதி வரை சுமார் 45 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்நிகழ்ச்சிகாக பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளார். இவர் நிரஞ்சனி அகாராவின் மகா மண்டலேஷ்வர் சுவாமி கைலாஷ் ஆனந்த் மகராஜ் முகாமில் 40 பேருடன் தங்கியுள்ளார். இவர் வரும் 20-ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதால் வரும் 15-ஆம் தேதி வரை முகாமில் தங்கி இருந்து கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடவுள்ளார்.
லாரன் பாவெல், பிரயாக்ராஜ் வருவதற்கு முன்பு வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது அவர் கருவறையில் அனுமதிக்கப்படாத நிலையில் கருவறையின் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விளக்கமளித்து சுவாமி கைலாஷ் ஆனந்த் பேசியதாவது, இந்துக்களை தவிர மற்ற மதத்தினர் சிவலிங்கத்தை தொடுவதற்கு அனுமதி இல்லை என்பதால் லாரன் பாவெல் கருவறையின் வெளியில் இருந்து சாமி தரிசனம் செய்தார். இந்த பாரம்பரியத்தை நான் கடைப்பிடிக்கவில்லை என்றால் இந்த மரபு முறிந்து விடும் என்று கூறினார்.
மேலும், லாரன் பாவெல் இந்து கலாசாரத்தை பற்றி அறிய விரும்புவதாகவும் அனைவரும் அவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்த அவர் இந்திய பாரம்பரியம் உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும் கூறினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கைலாஷ் ஆனந்த், ‘லாரன் பாவெலுக்கு நாங்கள் கமலா என பெயர் வைத்துள்ளோம் என்றும் அவர் எங்களுக்கு மகள் போன்றவர்’ என்றும் தெரிவித்தார்.
What's Your Reaction?