Ilaiyaraaja : கண்மணி அன்போடு பாடல் பஞ்சாயத்து... இளையராஜாவிடம் சரண்டர் ஆன மஞ்சும்மல் பாய்ஸ்!

Manjummel Boys Producer Agree 60 Lakhs Give To Ilaiyaraja : மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், தனது கண்மணி அன்போடு பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு இப்போது முடிவு கிடைத்துள்ளது.

Aug 5, 2024 - 15:48
Aug 6, 2024 - 10:09
 0
Ilaiyaraaja : கண்மணி அன்போடு பாடல் பஞ்சாயத்து... இளையராஜாவிடம் சரண்டர் ஆன மஞ்சும்மல் பாய்ஸ்!
Manjummel Boys Producer Agree 60 Lakhs Give To Ilaiyaraja

Manjummel Boys Producer Agree 60 Lakhs Give To Ilaiyaraja : மலையாளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி, 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. முக்கியமாக தமிழ்நாட்டில் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷன் செய்திருந்தது மஞ்சும்மல் பாய்ஸ். சில ஆண்டுகளுக்கு கொடைக்கானல் குணா குகையில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் சிதம்பரம். 

அதாவது கேரளாவின் மஞ்சும்மல் என்ற பகுதியில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறது ஒரு நண்பர்கள் குழு. அப்போது குணா குகை பகுதியில் தடையை மீறி அவர்கள் உள்ளே செல்ல, அதில் ஒருவர் மட்டும் குகைக்குள் விழுந்து உயிருக்குப் போராடுகிறார். இந்த கேரக்டரில் ஸ்ரீநாத் பாஸி நடிக்க, அவரை குகைக்குள் இறங்கி காப்பாற்றும் நண்பராக செளபின் சாஹிர் நடித்திருந்தார். குகைக்குள் தவறி விழுந்த நண்பனை, அவனது நண்பர்கள் கூட்டம் எப்படி காப்பாற்றியது என்பதை உணர்ச்சி மிகுதியோடு படமாக்கியிருந்தார் இயக்குநர் சிதம்பரம்.

இப்படத்தின் இறுதிக் காட்சிக்கு முன்பு, அதாவது ஸ்ரீநாத் பாஸியை காப்பாற்றும் இடத்தில், குணா படத்தில் இடம்பெற்ற ‘கண்மணி அன்போடு’ பாடலை படக்குழு பயன்படுத்தியிருந்தது. கமலின் குணா படத்தில் இடம்பெற்ற இப்பாடல் இளையராஜா இசையில் உருவானது. இளையராஜாவின் தனித்துவமான கம்போஸிங்கில் உருவான பாடல்களில் கண்மணி அன்போடு காதலனுக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. காதல் பாடலான இதனை ஃபிரண்ட்ஷிப் சாங்காக மாற்றியதில் தான் இயக்குநர் சிதம்பரம் மாஸ் காட்டியிருந்தார். அதுவரை ”மனிதர் உணர்ந்துகொள்ள இது மனித காதல் அல்ல” என்ற வரிகள் காதலர்களுக்கான டெம்ப்ளேட்டாக இருக்க, முதன்முதலாக அது நண்பர்களுக்கான வெர்ஷனாக பட்டையை கிளப்பியது.  

மேலும் படிக்க - அது நான் இல்லை... விஜய் ஆண்டனி ஓபன்!

ஒருவகையில் இந்தப் படம் தமிழ்நாட்டில் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க மிக முக்கியமான காரணமே கண்மணி அன்போடு பாடல் தான். இளையராஜாவின் இசைப் பற்றி அறிந்திடாத 2கே கிட்ஸ்கள், மஞ்சும்மல் பாய்ஸ் ரிலீஸுக்குப் பின்னர் கண்மணி அன்போடு பாடலோடு இளையராஜாவையும் கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில், இந்தப் பாடலை தன்னிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்திவிட்டதாக இளையராஜா புகார் கூறியிருந்தார். அதோடு தனது வழக்கறிஞர் சரவணன் மூலம், மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். ஆனால், அவர்களோ கண்மணி அன்போடு பாடல் ரைட்ஸை, பிரமீட், ஸ்ரீதேவி சவுண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் அனுமதி பெற்றே பயன்படுத்தியதாக தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொள்ளாத இளையராஜா தரப்பு, மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் 2 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதனையடுத்து மஞ்சும்மள் பாய்ஸ் தயாரிப்பு நிறுவனம் இளையராஜாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் முடிவில் கண்மணி அன்போடு பாடல் பயன்படுத்தியதற்கு இழப்பீடாக 60 லட்சம் ரூபாய் கொடுக்க மஞ்சும்மல் பாய்ஸ்(Manjummel Boys) தயாரிப்பு நிறுவனம் முன்வந்தது. இதனை இளையராஜாவும் ஏற்றுக்கொண்டதால், இந்த பஞ்சாயத்து தற்போது முடிவுக்கு வந்துள்ளது.      

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow