உலகம்

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்.. 2 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்டும் - வெள்ளை மாளிகை அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல் தொடர்பாக அதிபர் டெனால்ட் ட்ரம்ப் 2 வாரங்களுக்குள் முடிவெடுப்பார் என அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்.. 2 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்டும் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல்.. 2 வாரங்களுக்குள் முடிவெடுக்கப்டும் - வெள்ளை மாளிகை அறிவிப்பு
அணு ஆயுத உற்பத்தியை முன்வைத்து ஈரான் மீது கடந்த 13-ந் தேதி இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு ஆயுத தளங்கள், ராணுவ நிலைகள் உள்பட முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளால் தாக்கி வருகிறது. இதற்கு ஈரானும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. ஈரான் வீசிய பல ஏவுகணைகள், இஸ்ரேலின் பலத்த வான்பாதுகாப்பு அமைப்பான அயன் டோமையும் முறியடித்து அந்த நாட்டின் பல பகுதிகளில் பெருத்த சேதம் விளைவித்து வருகிறது.

பீர்ஷெபா நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சொரோகா மருத்துவமனை மீது ஈரானின் ஏவுகணை தாக்கியதில், மருத்துவமனை பலத்த பலத்த சேதம் அடைந்தது. அதில் இருந்த 240-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.

சைரன் ஒலிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த தாக்குதல் நடந்ததாகவும், இதில் அறுவை சிகிச்சை கட்டிடம் மிகவும் சேதமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தாக்கப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதற்காக டெஹ்ரானின் கொடுங்கோலர்களிடம் இருந்து முழு விலையையும் வசூலிப்போம் எனவும் அவர் சூளுரைத்தார்.

மறுபுறம் ஈரானின் அராக் நகரில் உள்ள கனநீர் உலை மற்றும் நட்டான்ஸ் அருகே உள்ள அணுசக்தி கட்டமைப்பையும் இஸ்ரேலின் ஏவுகணைகள் தாக்கியது. இது தொடர்பான செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ள நிலையல், தாக்குதலில் எந்தவித கதிர்வீச்சு அபாயமும் ஏற்படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளது. இருநாட்டு தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் கொல்லப்பட்டதாகவும், 1300-க்கு அதிகமானோர் காயமடைந்ததாகவும் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று கூறியுள்ளது. அதேபோல், இஸ்ரேலில் 24 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் திட்டமிட்டதை விட சிறப்பாக செயல்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ள பெஞ்சமின் நேதன்யாகு, ஈரானின் ஆளில்லாத ட்ரோன்களை கடற் மேற்பரப்பிலேயே சுட்டு அழித்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஈரான் ராணுவம் கிளிஸ்டர் குண்டு ஏவுகணைகளை பயன்படுத்துவதாக இஸ்ரேல் குற்றச்சாட்டியுள்ளது.

இந்த நிலையில் கத்தாரின் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தில் இருந்து விமானங்கள், டிரோன்களை அகற்றி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கிடையே இரு நாடுகளில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் பத்திரமாக மீட்டு வருகின்றன. இஸ்ரேலில் உள்ள இந்திய மாணவர்களை டெல் அவிவ்-ல் உள்ள இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தசூழலில் ஐரோப்பிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ஜெனீவா புறப்படுகிறார். எனினும் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் இல்லை என அமெரிக்கா அறிவித்து உள்ளது. ஈரானுக்கு எதிராக ராணுவத் தாக்குதலை நடத்துவதா.. வேண்டாமா என்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முடிவு எடுப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்-ஈரான் பிரச்னைக்கு போர் தீர்வாகாது என ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி-ஜிங்பின் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அமெரிக்கா தலையிடுவது ஆபத்தானது எனவும் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.