உலகம்

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர்.. அதிகரிக்கும் மரண தண்டனைகள்!

சவுதி அரேபியா அரசு இந்த ஆண்டில் இதுவரை 340 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

சவுதி அரேபியாவில் போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் வெளிநாட்டினர்.. அதிகரிக்கும் மரண தண்டனைகள்!
death sentences to increase in Saudi Arabia
சவுதி அரேபியாவில் ஒரே ஆண்டில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை நடப்பாண்டில் மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று (டிச.16) மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து, இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 340 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கடந்த 2024 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட 338 என்ற எண்ணிக்கையை முறியடித்து, சவுதி அரேபியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக அதன் சொந்தச் எண்ணிக்கையை கடந்துள்ளது.

மரண தண்டனை அதிகரிப்புக்கான காரணம்

இந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட 340 மரண தண்டனைகளில் பெரும்பாலானவை, அதாவது 232 பேர், 2023 ஆம் ஆண்டில் சவுதி அரேபியா தொடங்கிய 'போதைப் பொருள் தடுப்புப் போர்' தொடர்பான வழக்குகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். போதைப் பொருள் வழக்குகளின் மூலமே இந்த எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, மக்கா பகுதியில் கொலைக் குற்றங்களுக்காகவும் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட 193 வெளிநாட்டைச் சேர்ந்தவர்களில், 182 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச விமர்சனமும் சவுதி அரசின் நிலைப்பாடும்

உலகளவில் அதிக மரண தண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளில், சவூதி அரேபியா சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளது. போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படுவது வெளிநாட்டினரே என்று மனித உரிமைக் குழுக்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், சவுதி அரேபிய அதிகாரிகள் இதற்குப் பதிலளிக்கையில், பொது ஒழுங்கைப் பாதுகாக்கவும், மேல்முறையீட்டுக்கான அனைத்து வழிகளும் முடிந்த பின்னரே மரண தண்டனை பயன்படுத்தப்படுகிறது என்றும் வாதிடுகின்றனர்.