தமிழ்நாடு

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!

ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்.. தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது!
Headmaster arrested under the POCSO Act
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள ஒரு துவக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் பாலியல் சீண்டல்

ஆம்பூர் அடுத்த மேல் சாணாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பாரத் அம்பேத்கர் என்பவர் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு குடிபோதையில் வந்த அவர், 5-ஆம் வகுப்பு மாணவி ஒருவரை தன் மடியில் அமர வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர், வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்டக் கல்வி அலுவலகத்திற்குப் புகார் அனுப்பியுள்ளனர். புகாரின் பேரில், மாதனூர் வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டபோது, பொதுமக்கள் தாங்கள் பதிவு செய்த காட்சிகளைக் காண்பித்துள்ளனர். அப்போது, கல்வி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, பொதுமக்கள் தங்கள் செல்போன்களில் பதிவு செய்திருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை நீக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கர், இதற்கு முன்பு அரவட்லா, காட்டு வெங்கடாபுரம், பள்ளவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள துவக்கப்பள்ளிகளில் பணியாற்றியபோது, இதேபோன்ற தவறுகளைச் செய்ததாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர். வெறும் 15 நாட்களுக்கு முன்புதான் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீஸ் மற்றும் கல்வித்துறை நடவடிக்கை

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் கொடுத்த புகாரின் அடிப்படையில், உமராபாத் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, தலைமை ஆசிரியர் பாரத் அம்பேத்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும், அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் உத்தரவிட்டுள்ளார்.