தமிழ்நாடு

திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!

திருப்பூர் மாவட்டத்தில் விசாரணைக்கு சென்ற இடத்தில் 2 பேர் கொண்ட கும்பல், காவல் சிறபுப உதவி ஆய்வாளரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!
திருப்பூரில் உதவி ஆய்வாளர் வெட்டிக் கொலை: விசாரணைக்குச் சென்ற இடத்தில் நடந்த கொடூரம்!
திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சண்முகசுந்தரம் (52) கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு, தாராபுரத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரத்திற்கு ஒரு தகராறு குறித்து தகவலின் பேரில் குடிமங்கலம் பகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் பணியாற்றி வந்த தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறில், மகன் தங்கபாண்டியன் அரிவாளுடன் தனது தந்தையை வெட்ட முயன்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவம்குறித்து தகவல் அறிந்ததும், சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரம் தனது ஓட்டுநருடன் அந்தத் தோட்டத்திற்கு விரைந்துள்ளார். அங்குத் தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்த பிரச்சனையை முடித்து வைக்க அவர் முயற்சித்துள்ளார். அப்போது, ஆத்திரமடைந்த தங்கபாண்டியன், சண்முகசுந்தரத்தை அரிவாளால் கொடூரமாகத் தாக்கி, அவரது தலையைத் துண்டித்துக் கொலை செய்துள்ளார்.

இந்தத் தாக்குதலைக் கண்ட சண்முகசுந்தரத்தின் ஓட்டுநர், தன்னை வெட்ட முயன்ற தங்கபாண்டியனிடமிருந்து தப்பித்து, காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த சண்முகசுந்தரத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்குப் பிறகு தலைமறைவான மூர்த்தி மற்றும் தங்கபாண்டியன் ஆகிய இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம், காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.