தமிழ்நாடு

ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது

ஆன்லைன் டிரேடிங் மூலம் மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது

 ஆன்லைன் டிரேடிங்: மூதாட்டியிடம் ரூ.2.49 கோடி மோசடி...2 பேர் கைது
மூதாட்டியிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் மோசடி செய்த வழக்கில் 2 பேர் கைது
சென்னை, பாலவாக்கம் பகுதியைச் சேர்ந்த விளையாட்டு துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 70 வயது பெண் ஆன்லைன் முதலீட்டு விளம்பரத்தை பார்த்து கடந்த 20.11.2024 முதல் 18.01.2025 வரையிலான காலத்தில் HEM-Securities என்ற பெயரில் செயல்படும் முதலீட்டு தளத்தில் ஆன்லைன் மூலம் சுமார் ரூ.2.49 கோடி முதலீடு செய்துள்ளார். இவர் முதலீடு செய்த பணத்தை எடுக்க முயன்றபோது, நிறுவனத்தினர் பல்வேறு காரணங்களை கூறி, பணத்தை திரும்ப எடுப்பதை தடுத்து, மேலும் பணத்தை முதலீடு செய்யும்படி கேட்டுள்ளனர்.

மோசடி வழக்கில் 2 பேர் கைது

இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த புகார்தாரர் இதுகுறித்து கடந்த 19.08.2025 அன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின்பேரில் மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் உதவி ஆணையாளர் அவர்கள் வழக்குப்பதிவு செய்து சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளரால் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையில் ஆன்லைன் டிரேடிங் மூலம் மோசடி செய்த பணத்தை அனுப்ப திருப்பூர் ஸ்ரீ சாய் கிருஷ்ணா ஹோட்டலுக்குச் சொந்தமான Karur Vysya Bank கணக்கை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த வங்கி கணக்கு எண்ணை வைத்து, வங்கி கணக்கு விபரங்களை முக்கிய குற்றவாளிகளுக்கு வழங்கி கமிஷன் பெற்ற திருப்பூரைச் சேர்ந்த ஜெயராஜ், தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆகிய இருவரையும் நவீன தொழில் நுட்ப வசதிகள் மூலம் இருப்பிடம் கண்டறிந்து கடந்த 23ம் தேதி தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர்.

ஆவணங்கள் பறிமுதல்

மேலும் விசாரணையில் இருவரும், இதேபோன்று பல வங்கி கணக்குகளை துவக்கி மோசடி கும்பல்களுக்கு பரிவர்த்தனைகளுக்காக வழங்கி கமிஷன் பெற்றுள்ளது தெரியவந்தது. மேலும் வங்கி கணக்கு விபரங்களை NCRP portal மூலம் சரிபார்க்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்குகள் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல சைபர்கிரைம் வழக்குகளுடன் தொடர்புடையவை என்பது உறுதி செய்யப்பட்டது.

அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், பாஸ்புக்ஸ், செக் புக், ஏடிஎம் கார்டுகள், அடையாள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் சைதாப்பேட்டை, 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொதுமக்களுக்கு காவல் ஆணையர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் இதுபோன்ற போலியான தொலைபேசி அழைப்புகள், அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்கள், போலி முதலீட்டு செயலிகள், வலைத்தளங்கள் குறித்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும், தங்களின் வங்கி கணக்குகளை பிறரின் பயன்பாட்டிற்கு விடக்கூடாது என்றும், போலியாக ஆவணங்கள் கொடுத்து நடப்பு வங்கி கணக்குகள் (Current Accounts) ஆரம்பித்து பயன்படுத்த வேண்டாம் என்றும், தெரியாத நபர்களின் கோரிக்கையை ஏற்று வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் அறிவுறுத்தி உள்ளார்.

பொது மக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண் 1930-க்கு தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக புகார் செய்ய https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரையும் சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.