தமிழ்நாடு

மீண்டும் விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்.. போலீசார் தீவிர விசாரணை

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற விமானத்தின் மீது இரண்டாவது முறையாக பச்சை நிற லேசர் லைட் அடிக்கப்பட்டகால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மீண்டும் விமானத்தின் மீது அடிக்கப்பட்ட லேசர் லைட்.. போலீசார் தீவிர விசாரணை
Laser light hit on plane again
துபாயிலிருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் 304 பயணிகளுடன், நேற்றிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தது. சென்னை விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக, விமானம் தாழ்வாக பறந்துக் கொண்டிருந்தது.

அப்போது சென்னை பரங்கிமலை பகுதியில் இருந்து, பச்சை நிறத்தில் சக்தி வாய்ந்த லேசர் லைட் ஒளி, விமானத்தின் மீது அடிக்கப்பட்டது. இதனால் விமானிகள் சற்று நிலை குலைந்தாலும், அடுத்த சில வினாடிகளில் தங்களை சுதாகரித்துக் கொண்டு, தாழ்வாக பறந்து கொண்டு இருந்த விமானத்தை உயரத்தில் பறக்கச் செய்தனர். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசர தகவல் தெரிவித்த விமானிகள், விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டதாக புகார் செய்தனர்.

இதனையடுத்து, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான பாதுகாப்பு பிரிவான ஃபீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி மற்றும் சென்னை விமான நிலைய போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர். அதோடு சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ரேடர் கருவினால், அந்த ஒளி எங்கிருந்து வந்தது என்று ஆய்வு செய்தனர். சில வினாடிகளில் அந்த லேசர் லைட் ஒளி மறைந்து விட்டது.
இதனையடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது.இருப்பினும் இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து சென்னை நந்தம்பாக்கம், கிண்டி காவல் நிலையங்களும் தகவல் கொடுத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதேபோன்ற சம்பவம் கடந்த மே மாதம் 25 ஆம் தேதி இரவு சென்னையில் தரையிறங்க வந்த, இதே எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீது, பச்சை நிற லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டது. அடுத்த 10 நாட்களில், இரண்டாவது முறையாக அதே விமானம் மீது பச்சை நிற லேசர் லைட் ஒளி அடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தை தொடந்து, எச்சரிக்கை விடுத்த இந்திய விமான நிலைய ஆணையம், விமானம் போக்குவரத்துக்கு இடையூறு செய்வர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.