தமிழ்நாடு

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!

மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!
மாதாந்திர மாமூல் கேட்டு அட்டகாசம்; நிறைமாத கர்ப்பிணியின் காதை வெட்டிய கும்பல்!
சென்னை, முகப்பேரை அடுத்த பாடி, கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். அவரது மனைவி தமிழ்மதி, நிறைமாத கர்ப்பிணி. நேற்று இரவு, கடையை மூடும்போது, அடையாளம் தெரியாத நான்கு பேர் அங்கு வந்துள்ளனர்.

கணவன், மனைவி மீது தாக்குதல்

வேல்முருகனை மிரட்டிய அந்தக் கும்பல், மாதாந்திர மாமூலாக ₹5,000 தர வேண்டும் எனக் கேட்டுள்ளது. வேல்முருகன் மறுத்ததால், கடையின் பூட்டை எடுத்து அவரைத் தாக்கியுள்ளனர். இதைப் பார்த்துத் தடுக்க வந்த அவரது மனைவி தமிழ்மதியையும், கத்தியால் தாக்கியுள்ளனர். இதில், தமிழ்மதியின் காதை அறுத்துவிட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியது.

ரத்தக் காயங்களுடன் இருந்த வேல்முருகன், தமிழ்மதி இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து, ஜெஜெ நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மண்ணெண்ணெய் குண்டும் இதே கும்பல்தான்?

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இதே கும்பல், அண்ணா நகர் மேற்கு விரைவு ரவுண்ட் பில்டிங் பகுதியைச் சேர்ந்த ரவுடி மணிரத்தினம் என்பவர் வீட்டிலும் மண்ணெண்ணெய் குண்டு வீசியது தெரியவந்துள்ளது.

மணிரத்தினம் வீட்டில் இருந்தபோது, சுனாமி சூர்யா என்பவர் அவரை வெளியிலிருந்து அழைத்துப் பேசியுள்ளார். அப்போது, சூர்யாவின் நண்பர்கள் மூவர், மணிரத்தினத்தைத் தாக்க வந்தனர். இதைக் கண்ட பொதுமக்கள் சத்தம் போடவே, நால்வரும் தப்ப முயன்றனர். அந்தச் சமயத்தில், சூர்யா தனது இருசக்கர வாகனத்தில் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலுக்குத் தீ வைத்து, மணிரத்தினம் வீட்டு வாசலில் வீசிவிட்டுச் சென்றார். பொதுமக்கள் உதவியுடன் தீ உடனடியாக அணைக்கப்பட்டது.

இந்த இரு சம்பவங்களிலும் சம்பந்தப்பட்ட கும்பல் ஒன்றாக இருக்கலாமெனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவான நபர்களைத் தேடி வருகின்றனர். ஒருவரைச் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.