தமிழ்நாடு

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!

கோவை அவிநாசி சாலை மேம்பாலத் திறப்பைக் கொண்டாடிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, எம்.எல்.ஏக்கள் உட்பட அதிமுகவினர் மீது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜி.டி.நாயுடு மேம்பாலம் திறப்பு.. இனிப்புக் கொடுத்து கொண்டாடிய எஸ்.பி. வேலுமணி மீது வழக்குப்பதிவு!
Case registered against SP Velumani
கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை ரூ. 1,791 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு உயர்மட்ட மேம்பாலத்தை, முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று முன்தினம் (அக்.09) திறந்து வைத்தார்.

அதிமுகவினர் கொண்டாட்டம்

இந்தத் திட்டம் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்டதால், அதிமுகவினர் அதனைக் கொண்டாடும் வகையில் நேற்று (அக். 10) உப்பிலிபாளையம் ரவுண்டானா அருகில் கூடினர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க.வினர் அங்கு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இந்நிலையில், மேம்பாலத் திறப்பு விழாக் கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி நடத்தியதாகக் கூறி, கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ஜுனன், கே.ஆர். ஜெயராமன், தாமோதரன், பி.ஆர்.ஜி. அருண் குமார் உள்ளிட்டவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் கொண்டாட்டத்துக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.