நீட் தேர்வு விவகாரம்
நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த, 22 மாணவ மாணவிகளுக்கு அதிமுக சார்பில் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோடு காளைமாடு சிலை அருகே நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி.கருப்பண்ணன் , கே.வி.ராமலிங்கம் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 22 மாணவ - மாணவிகள் இறப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அதிமுகவினர் பின்னர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அ.தி.மு.க. மாணவரணி சார்பில் ‘நீட்’ தேர்வில் உயிரிழந்த, 22 மாணவ, மாணவியருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்தை ஏற்றி, மௌன அஞ்சலி செலுத்தியுள்ளோம்.தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ரத்து செய்வோம், என கூறினார்கள். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்கள். உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்ததும், வழக்கை வாபஸ் பெற்றார்கள். அதன்பின், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினர். இதுவரை, அதற்கான நல்ல தீர்வை காண இயலவில்லை. 1 கோடி உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி, ‘நீட்’டை ரத்து செய்ய வேண்டும் என தி.மு.க., இளைஞரணி சார்பில் நிகழ்ச்சி நடந்தும் இன்று வரை வெற்றி காணவில்லை.
திமுகவால் முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை
எல்லோரது கனவும் ‘நீட்’தேர்வு ரத்தும், மாணவர்களுக்கு உள்ள கஷ்டங்களாக தெரிவதால், அதை ரத்து செய்ய வலியுறுத்துகிறோம். ஆனால் தி.மு.க., ‘நீட்’தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்வோம் எனக்கூறி, 4 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியை நடத்திவிட்டு, அவர்களால் ஏதும் செய்ய முடியவில்லை.அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் தான், ‘நீட்’ தேர்வுக்காக, 412 இடங்களில் மையங்கள் அமைத்து பயிற்சி வழங்கினோம்.அப்பயிற்சி கூட இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர், 7.5 சதவீத இடஒதுக்கீடு பள்ளி கல்வித்துறை – மருத்துவ கல்வித்துறை மூலம் இணைந்து வழங்கியதன் மூலம் மாணவர்கள் எதிர்காலம் சிறப்பானது. 720 மதிப்பெண்ணுக்கு, 510 மதிப்பெண் பெறும் தனியார் பள்ளி மாணவன் மருத்துவ கல்வி கிடைக்கும். ஆனால், அரசு பள்ளியில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், 150 முதல், 200 மதிப்பெண் பெற்றாலே மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த ஆட்சியில் வாய்ப்புகளை சரியான முறையில் எடுத்து சென்று வழங்கினோம். தற்போது ‘நீட்’டை அகற்றுவோம் எனக்கூறி, 4 ஆண்டு காலம் கடந்தும், இன்று வரை அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இந்த அரசு என்ன செய்யப்போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.