தமிழ்நாடு

தீவிரமடையும் 'மோன்தா' புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

'மோன்தா' புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தீவிரமடையும் 'மோன்தா' புயல்.. 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!
TN Weather Update
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

ஆந்திராவில் கரையை கடக்கும் புயல்

இந்த நிலையில், தமிழகத்தில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணி யளவில் 'மோன்தா' புயலாக வலுவடைந்தது.

இந்த 'மோன்தா' புயல் இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 560 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடா வில் இருந்து, தெற்கு-தென்கிழக்கு திசையில் 620 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 650 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இந்த 'மோன்தா' புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்த புயல் ஆந்திர மாநில கடலோர பகுதிகளில் நாளை (அக்.28) காலையில் தீவிர புயலாக மாறுகிறது. பின்னர் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அரு கில் தீவிர புயலாகவே நாளை இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.

கன முதல் மிக கனமழை எச்சரிக்கை

இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல், நாளை (அக்.28) திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை வானிலை - மீனவர்களுக்கான எச்சரிக்கை

சென்னையில் இன்றும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வரும் இன்றும் நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.