தமிழ்நாடு

கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு: அமைச்சர் அறிவிப்பு!

கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கி சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு இழப்பீடு: அமைச்சர் அறிவிப்பு!
Minister KKSSR Ramachandran

'டிட்வா' புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட கனமழையால் தமிழ்நாட்டில் நீரில் மூழ்கிச் சேதமடைந்த விளை நிலங்களுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.

புயல் சின்னத்தின் தற்போதைய நிலையும் திசை மாற்றமும்

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், புயல் சின்னத்தின் நிலை குறித்துப் பேசினார். 'டிட்வா' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னைக்குத் தென்கிழக்கே 40 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது நேராக வடக்கு திசை நோக்கிச் செல்லும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தனியார் ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர்.

ஆனால், அதற்கு மாறாக, புயல் சின்னமானது சென்னை கடற்கரைக்கு அருகே ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவிழந்து, காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, மாமல்லபுரத்துக்கு அருகே தமிழக நிலப்பரப்பை அடையும். அப்போது விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்றார்.

மழைப் பதிவும் சேத விவரங்களும்

தொடர்ந்து பேசிய அவர், "சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 134 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக எண்ணூரில் 260 மி.மீ, பாரிமுனையில் 250 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவமும் 85,521.76 ஹெக்டேர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. 'டிட்வா' புயலால் 4 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 582 கால்நடைகள் பலியாகியிருக்கின்றன.

நிவாரண அறிவிப்பு

கனமழையால் தமிழ்நாடு முழுவதும் நீரில் மூழ்கிச் சேதமடைந்த விளை நிலத்துக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்தார்.