தமிழ்நாடு

கைரேகை வைக்க வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ரேஷன் கடை ஊழியர் கைது!

ரேஷன் கடைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைரேகை பதிவு செய்யும் சாக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கைரேகை வைக்க வந்த இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டல்.. ரேஷன் கடை ஊழியர் கைது!
Ration Shop
சென்னையில் நியாய விலைக் கடைக்கு வந்த இளம்பெண்ணிடம் கைரேகை பதிவு செய்யும் சாக்கில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஊழியரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை மாதவரம் ராஜாஜி தெருவில் உள்ள நியாய விலைக் கடைக்கு, அப்பகுதியைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் நேற்று பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த கடை ஊழியர், அப்பெண்ணைப் பயோமெட்ரிக் இயந்திரத்தில் கைரேகை வைக்குமாறு கூறியுள்ளார். கைரேகை சரியாகப் பதிவாகவில்லை எனக் கூறி, கருவிழிப் பதிவுக்காகப் பெண்ணை மிக அருகில் அழைத்த அந்த ஊழியர், எதிர்பாராத விதமாக அவரிடம் பாலியல் ரீதியாக அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

கணவர் கொடுத்த 'தர்ம அடி'

ஊழியரின் செயலால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், உடனடியாகக் கடையை விட்டு வெளியேறி அருகில் இருந்த தனது கணவரிடம் விபரத்தைக் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர், உடனடியாக ரேஷன் கடைக்குச் சென்று அந்த ஊழியரைப் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளார். பின்னர் அவரை மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிறையில் அடைப்பு

பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலியல் சீண்டலில் ஈடுபட்டவர் நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி (56) என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.