தமிழ்நாடு

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன ? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் சுட்டுப்பிடிக்கப்பட்டது குறித்து காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கமளித்துள்ளார்.

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன ? காவல் ஆணையர் விளக்கம்!
Police Commissioner explains
கோவை விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் துப்பாக்கிச் சூடு மூலம் கைது செய்யப்பட்டது குறித்துக் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், இன்று செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.

சம்பவம் நடந்தது எப்படி?

காவல் ஆணையர் சரவணசுந்தர் கூறியதாவது, "கோவை விமான நிலையத்தின் சுவருக்குப் பின்னால் ஒதுக்குப்புறமான இடத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. குற்றவாளிகள் காரின் கண்ணாடியை உடைத்து, மாணவியின் ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மூன்று பேரும் மது அருந்திவிட்டு இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் திட்டமிட்டு நடந்ததாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

துப்பாக்கிச் சூடு மற்றும் கைது நடவடிக்கை

இந்த வழக்கில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுக் குற்றவாளிகள் தேடப்பட்டனர். பொதுமக்கள் வைத்திருந்த பல சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாத நிலையில், சுமார் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மூன்று குற்றவாளிகளையும் போலீசார் அடையாளம் கண்டனர். நேற்று இரவு சுமார் 11 மணி அளவில், குற்றவாளிகள் துப்பாக்கியால் சுடப்பட்டுப் பிடிக்கப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது காயமடைந்த காவலர் சந்திரசேகர் உட்படக் குற்றவாளிகள் மூவரும் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றவாளிகள் குறித்த விவரம்

கைது செய்யப்பட்டவர்களில் சதீஷ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள் ஆவர். குணா என்பவர் அவர்களது உறவினர். மூன்று பேர் மீதும் ஏற்கனவே கொலை வழக்கு உள்ளது. மேலும், மூவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் (Goondas Act) பாய்ந்துள்ளது. இந்த மூவரும் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் கிடையாது. கைது செய்யப்பட்டவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மாணவி உடல்நிலை

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை விமர்சிக்காதீர். எங்கும் எந்த நேரத்திலும் செல்ல அனைவருக்கும் உரிமை உள்ளது. சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துகளைப் பரப்ப வேண்டாம்.

பொதுமக்கள் அனைவரும் அவசரகாலங்களில் காவலன் மொபைல் செயலியைப் பயன்படுத்த வேண்டும். குற்றச் சம்பவம் குறித்துத் தகவல் சொல்லக்கூட நேரமில்லாதபோது, செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் சம்பவ இடத்தை காவல்துறை எளிதாகக் கண்டறிய முடியும்" என்று அவர் வலியுறுத்தினார்.