தமிழ்நாடு

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
TN Weather
தமிழகத்தில் கடந்த மாதம் (நவம்பர்) இறுதியில் டிட்வா புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அதன்பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. மேலும், தமிழகத்தில் நாகபட்டினம், ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவியது.

மிதமான மழைக்கு வாய்ப்பு

இந்த நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வரும் 14 தேதி முதல் 18 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை வானிலை

சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.