தமிழ்நாடு

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!
செல்போன் திருடர்கள் கைது.. ஆய்வாளர் அறை கண்ணாடியை உடைத்த ரவுடிகள்!
சென்னை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர், தன் நண்பர்களுடன் பிரியாணி சாப்பிடப் புளியந்தோப்பிற்குச் சென்றுள்ளார். அதிகாலை நேரத்தில் செங்கை சிவம் பாலம் அருகே வந்தபோது, இருவர் பைக்கில் வந்து கத்தியைக் காட்டி மிரட்டி, தாமஸின் செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர். உடனடியாக அவர் புளியந்தோப்பு போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளார்.

காவலர்கள் மீது தாக்குதல்:

தகவலின் பேரில் ரோந்துப் பணியில் இருந்த போலீசார், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலை அருகே, செல்போன் பறித்துச் சென்ற ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்தனர். அப்போதுதான் இந்தப் பயங்கரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.

போலீசாரைக் கண்டதும் ஹர்ஷித், ரோந்து காவலர் அய்யப்ப லிங்கத்தை எட்டி உதைத்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மறுபுறம், மற்றொரு ரவுடியான சல்மான் பாஷா, போலீஸ் வாகனம் உள்ளேயே பீர் பாட்டிலை உடைத்து, காவலர் தீர்த்தமலையின் கையில் வெட்டியுள்ளார். இதில் தீர்த்தமலைக்குக் காயம் ஏற்பட்டது.

காவல் நிலையத்தில் அட்டகாசம்:

பொதுமக்கள் உதவியுடன் இருவரையும் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பிறகும், அவர்களின் அட்டகாசம் நிற்கவில்லை. காவல் நிலையத்திற்குள் இருவரும் போதையில் கடும் ரகளை செய்துள்ளனர். ஆபாசமாகத் திட்டிப் போலீசாரைத் தாக்க முயன்றதோடு, காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

பின்னர், இருவரிடமிருந்தும் செல்போன்கள் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் அய்யப்ப லிங்கம் மற்றும் தீர்த்தமலை ஆகியோர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவர் மீதும் ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாகவும், குறிப்பாகச் சல்மான் பாஷா மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.