தமிழ்நாடு

’கும்பலாக சுத்துவோம்.. அய்யோ அம்மான்னு கத்தவோம்’.. ரேசில் ஈடுபட்ட இளசுகள் அதிரடி காட்டிய போலீஸ்

அண்ணாநகரில் இருந்து கும்பலாக அதிவேகமாக வாகனத்தை இயக்கிய விவகாரத்தில் பத்து இளைஞர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ஒன்பது இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. வார இறுதியில், அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸ் வெளியிட ஓட்டியதாக இளைஞர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

’கும்பலாக சுத்துவோம்.. அய்யோ அம்மான்னு கத்தவோம்’.. ரேசில் ஈடுபட்ட இளசுகள் அதிரடி காட்டிய போலீஸ்
ரீல்ஸ்க்காக பைக் ரேஸ் இளைஞர்களின் வாகனங்களுடன் 10 பேர் கைது
சென்னையில் அண்ணா நகரில் இருந்து கோயம்பேடு வழியாக அடையாறு நோக்கி அதிவேகமாக சில இளைஞர்கள் வாகனத்தை இயக்கி சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்து சிசிடிவி காட்சிகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் நம்பர் பிளேட்டை வைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பைக்கை அதிவேகமாக ஓட்டிய கல்லூரி மாணவர்கள் உட்பட பத்து இளைஞர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து விலை உயர்ந்த ஒன்பது இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோடம்பாக்கத்தை சேர்ந்த சேக் சாகுல் அஹமது, சதாம் மொய்தீன், நதீம் ஹுசைன், மகேஷ் ராஜா, முகமது ஆசிப் உள்ளிட்ட 10 பேர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது. டீம் 2 என்ற பெயரை வைத்துக்கொண்டு ரேஸ் மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்கி ரீல்ஸாக பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக வீக் எண்ட் நாட்களில் இன்ஸ்டாகிராமில் இந்த நேரத்தில், இந்த இடத்தில் ரேஸ் நடப்பதாக ஸ்டோரி வைப்பதையும், அதை பார்த்து பலர் ஒன்று கூடி வாகனத்தை அதிவேகமாக இயக்குகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் அடையவேண்டும் என தெரிவித்து அதிவேகமாக வாகனத்தை இயக்கி அதை ரீல்ஸில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக அனைத்து இடங்களிலும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உத்தரவிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.