தமிழ்நாடு

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக வட்டச் செயலாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!
பள்ளி மாணவியை காதலிக்க வற்புறுத்திய அதிமுக பிரமுகர்.. போலீசார் வலைவீச்சு!
சென்னை ராயப்பேட்டை பகுதி சேர்ந்த பள்ளி மாணவி நேற்று பள்ளிக்கு சென்று திரும்பி வீட்டிற்கு வந்த நிலையில் ராயப்பேட்டை மியூசிக் அகாடமி அருகே ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து மாணவியை காதலிக்க கூறி கத்தியை காட்டி வற்புறுத்தியதாக தெரிகிறது.

பள்ளி மாணவி அதனை மறுக்கவே அவரை தலைமுடியை பிடித்து அடித்து நடுரோட்டில் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு ஓடி வந்து கையில் கத்தியோடு தலைமுடியை பிடித்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை பிடிக்க முயற்சித்த போது அந்த இடத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பினார். இதனை அடுத்து பள்ளி மாணவியின் தாயார் சென்னை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்தபோது இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஏற்கனவே இந்த பள்ளி மாணவியிடம் பிரச்சனை செய்து வந்த சூர்யா என்பதும் இவர் ராயப்பேட்டை பகுதியில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை 118 வது வட்டச் செயலாளராக உள்ளார் என்பதும் தெரியவந்தது.

சூர்யா மீது ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், சூர்யாவை தீவிரமாக தேடி வருகின்றனர். சூர்யாவின் மாமா அதிமுக வட்ட துணைச் செயலாளர் கானா ஆறுமுகம் என்பதும் இவருடைய பெயரை கூறி ராயப்பேட்டை ஐஸ் ஹவுஸ் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் புகுந்து அராஜகம் செய்து வருவதும் மாமுல் கேட்டு மிரட்டி பணம் பறிப்பதும் போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.