தமிழ்நாடு

அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..! யார் இந்த கோட்டூர் சண்முகம்? அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஆறுதல் அளித்தாலும் 'யார் அந்த சார்' என்ற கேள்வி இன்னமும் சோஷியல் மீடியாக்களில் எதிரொலித்துக்கொண்டே இருப்பது தி.மு.கவின் இமேஜை காலி செய்து வருகிறது. இந்த நிலையில், அமைச்சருடன் தொடர்பில் இருந்த வட்டச் செயலாளருக்கும் ஞானசேகரனுக்கு என்ன தொடர்பு, அமைச்சருக்கு அந்த வட்டச் செயலாளருக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..!  யார் இந்த கோட்டூர் சண்முகம்?  அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?
அடியாள் டூ திமுக வட்டச் செயலாளர்..! யார் இந்த கோட்டூர் சண்முகம்? அமைச்சருடனான தொடர்பு உருவானது எப்படி?
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி தன் ஆண் நண்பருடன் இரவு நேரத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் பேசிக்கொண்டு இருந்ததை, மறைந்திருந்து வீடியோ எடுத்தான் ஞானசேகரன். பிறகு என்ன? வழக்கம் போல அந்த வீடியோவை மாணவியிடம் காட்டி பாலியல் வன்கொடுமை செய்தான். அது மட்டுமல்ல ‘நான் கூப்பிடும்போது எல்லாம் நீ வரவேண்டும்' என மிரட்டலும் விடுத்தான்.

ஒருகட்டத்தில் பாதிக்கப்பட்ட மாணவி துணிந்து வந்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கைது செய்யப்பட்டான் ஞானசேகரன். ஆனால் சிறிது நேரத்திலேயே போலீஸாரால் அவன் விடுவிக்கப்பட்டான். காரணம் கோட்டூர்புரம் வட்டச் செயலாளர் சண்முகம். இவர்தான் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு டாப் டு பாட்டம், லெஃப்ட் ரைட் எல்லாம்.

சண்முகத்தை வைத்து மா.சு.விடம் மிக நெருக்கமாக இருந்தான் ஞானசேகரன். இதனால் சட்டை காலரை தூக்கிவிட்டபடி போலீஸின் பிடியில் இருந்து வெளியே வந்தான். சென்னை கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரன், வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பில் ஈடுபடுவது, ரெளடிகளுடன் சேர்ந்து வலம்வந்தது என பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்திருக்கிறான். இவன் மீது 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சரி! யார் இந்த வட்ட செயலாளர் கோட்டூர் கோ.சண்முகம்? அவரைப் பற்றி விசாரித்தபோது கிடைத்த தகவல்கள்... வட்டச் செயலாளர் கோட்டூர் கோ.சண்முகமும், ஞானசேகரனும் நெருங்கிய நண்பர்கள். 2022ம் ஆண்டு டிசம்பரில்தான் சண்முகத்திற்கு வட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதன்பிறகு தான் ஞானசேகரனும் வளரத் தொடங்கினான். 'ஜிம் ஏழுமலை' என்பவரிடம் கைகட்டி அடிதடி தொழிலை கற்றுக்கொண்ட சண்முகம் நாளடைவில் தி.மு.கவில் தஞ்சம் புகுந்தார்.

அவருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் அரசியல் கெமிஸ்ட்ரி ஒத்துப்போகவே சண்முகத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தார். இதற்கு நடுவே சண்முகத்தை இரண்டு முறை அவரது பழைய எதிரிகள் 'ஸ்கெட்ச்' போடவே உயிரை காப்பாற்றிக்கொள்ள தி.மு.கவில் வட்டச் செயலாளர் பதவியை வாங்கி வைத்துக்கொண்டார் என்று கூறப்படுகிறது.

சண்முகத்தின் தயவில் ஞானசேகரனுக்கு சைதை கிழக்கு பகுதி மாணவர் அணி துணை அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், அமைச்சரின் தீவிர ஆதரவாளர் ஞானசேகரனால் இப்படியொரு 'பெரிய டேமேஜ்' வரும் என்பதை தி.மு.க நினைத்துப் பார்க்கவில்லை. ஞானசேகரன் விவகாரம் பெரிய அளவில் பேசப்படவே அமைச்சரின் தொகுதியில் அவர் இல்லாமல் அரசு விழாக்களை நடத்தி, அதில் பங்கேற்று தன் கோபத்தைக் காட்டினார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் கடந்த பிப்ரவரி 17ம் தேதி சண்முகத்தின் தம்பிக்கு சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் இல்லத்தில் திருமண வைபவத்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் மறுக்கவே, அதே நாளில் தன் இல்லத்திலேயே திருமணத்தை நடத்தி வைத்தார் அமைச்சர்.

பிறகு சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு மண்டபத்தில் விமர்சையாக நடந்த சண்முகத்தின் தம்பி திருமண வரவேற்பிலும் பங்கேற்றார். அதே நேரத்தில் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க பல அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் யாரும் பங்கேற்கவில்லை.

இவ்வளவு விவகாரங்களுக்குப் பிறகும் இப்போதும் சண்முகத்துக்கு முட்டுக் கொடுத்து வருகிறார் அந்த அமைச்சர். இன்னொரு பக்கம் அவரை வட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என திமுக சீனியர்கள் பலர் கொடுத்த அட்வைஸை தொடர்ந்து நிராகரித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படி பவர்ஃபுல்லாக இருக்கும் சண்முகத்தை இந்த விவகாரத்தில் இன்னமும் போலீஸார் விசாரிக்க முன் வராதது பல சந்தேகங்களை கிளப்புகிறது.

அதேபோல் போலீஸார் விசாரணைக்கு முதலில் அழைத்துச் செல்லப்பட்ட ஞானசேகரனை, கைது செய்யாமல் வீட்டுக்கு அனுப்பியது ஏன்? கோட்டூரைச் சேர்ந்த ஞானசேகரனுக்கு பல்கலைக்கழகத்தில் என்ன வேலை? என அப்போதே போலீஸார் கேட்டு, கிடுக்கிப்பிடி போட்டு கைது செய்திருக்க வேண்டுமல்லவா? 7 திருட்டு வழக்குகள் உட்பட 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள குற்றவாளியான ஞானசேகரனை விடுவித்த போலீஸார் மீது ஏன் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை? அரசியல் செல்வாக்கு மற்றும் போலீஸார் ஆதரவுடன் வலம் வந்த ஞானசேகரன் மிரட்டல் வலையில் சிக்கிய பல மாணவிகளை வேறு யாருக்காவது ஞானசேகரன் விருந்தாக்கி இருக்கிறாரா? என்பதெல்லாம் பொதுமக்கள் தரப்பில் இருந்து வீசப்படும் கேள்விகளில் சில. அதேபோல இவ்வழக்கில் தீர்ப்பு வந்த பிறகும்கூட முழுமையான உண்மை வெளிவரவில்லையே என்பது பொதுமக்களின் ஆதங்கம்.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, 'இதுதொடர்பாக நான் பலமுறை விளக்கம் அளித்துவிட்டேன். கட்சியில் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருப்பதால், வட்டச் செயலாளர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை என்னால் தவிர்க்கமுடியாது" என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இதைத்தொடர்ந்து வட்டச் செயலாளர் சண்முகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் நம் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, ஞானசேகரன் விவகாரத்தில் மழை விட்டும் தூவானம் விடவில்லை.

குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் கு.கணேஷ்குமார்.