விளையாட்டு

ஏலத்தில் எடுக்காததால் விரக்தி.. கபடிக்கு குட்-பை சொன்ன பிரதீப் நர்வால்

நடந்து முடிந்த PKL 12-வது சீசனுக்கான ஏலத்தில், பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதீப் நர்வால்.

ஏலத்தில் எடுக்காததால் விரக்தி.. கபடிக்கு குட்-பை சொன்ன பிரதீப் நர்வால்
PKL superstar Pardeep Narwal announces his retirement from kabaddi as a player
டி20 கிரிக்கெட் போட்டிகளுக்காக இந்தியாவில் ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்தது வணிக ரீதியாகவும் ஹிட் அடித்தது. ஐபிஎல் பார்முலாவினை பின்பற்றி கால்பந்து,வாலிபால், கபடி விளையாட்டுகளிலிலும் பீரிமியர் லீக் தொடர் அறிமுகப்படுத்தப்பட்டது.

புரோ கபடி லீக் (PKL) தற்போது 12 வது சீசனை எட்டியுள்ளது. புரோ கபடி லீக் வரலாற்றில் 3 முறை சாம்பியன் பட்டங்களை வென்ற நட்சத்திர வீரரான பிரதீப் நர்வால், சமீபத்தில் நடைப்பெற்ற PKL சீசன் 12-க்கான வீரர்களின் ஏலத்தில் ஏலம் போகாததைத் தொடர்ந்து நேற்றைய தினம் கபடியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். விளையாட்டு வர்ணனையாளர் சுனில் தனேஜாவுடன் நேரலையின்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டது கபடி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

'டப்கி கிங்' :

28 வயதான பிரதீப் நர்வால், PKL வரலாற்றில் மிகச்சிறந்த ரைடர்களுள் ஒருவர் ஆவார். அவர் ஒட்டுமொத்த PKL தொடரில் மொத்தம் 1801 ரைடு புள்ளிகளைப் பெற்றுள்ளார். அவர் ரசிகர்கள் மத்தியில் 'டப்கி கிங்' என்று அழைக்கப்படும் ஒரு தனித்துவமான ரைடிங் பாணியைக் கொண்டிருந்தார். இவர் ரைடிங் செல்லும் அழகை காணவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. பிரதீப் நர்வால் பாட்னா பைரேட்ஸ் அணிக்காக ஐந்து சீசன்கள் விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில், பாட்னா பைரேட்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்று முறை PKL சாம்பியன் பட்டத்தை (சீசன் 3, 4, 5) வென்று அசத்தியது. இந்த வெற்றிகளுக்கு பிரதீப் நர்வால் முக்கிய பங்காற்றினார். சீசன் 8-இல் அவர் UP-யோத்தாஸ் அணிக்கு மாறினார்.

ஏலத்தில் காத்திருந்த அதிர்ச்சி:

புரோ கபடி லீக் 12-வது சீசனுக்கான ஏலம் மும்பையில் மே(31) ஆம் தேதி தொடங்கியது. சீசன் 11-ல் கலக்கிய முகதுரேசா ஷாட்லூயி-வை ரூ.2.23 கோடிக்கு குஜராத் அணி ஏலத்தில் எடுத்தது. தமிழ் தலைவாஸ் அணி அர்ஜூன் தேஷ்வலை ரூ.1.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

இந்த வரிசையில், மூன்று முறை சாம்பியனான பிரதீப் நர்வாலை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. கடந்த நான்கு சீசன்களாக UP யோத்தாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ள பிரதீப் நர்வால் எதிர்ப்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை என்பது தான் நிதர்சனம். அணியின் வெற்றிக்கு அவரது பங்களிப்பு பெரிய அளவில் உதவவில்லை. இதனால், தான் ஏலத்தில் பிரதீப் நர்வாலை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை என கருதப்படுகிறது.

ஓய்வு முடிவு- பயிற்சியாளராக மாற திட்டம்:

ஏலத்தில் யாரும் தன்னை எடுக்க முன்வராத நிலையில், விளையாட்டு வர்ணனையாளர் சுனில் தனேஜாவுடனான நேரலையின்போது கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக பிரதீப் நர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் கபடி பயிற்சியாளராக களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கபடி போட்டிகளில் புகழின் உச்சத்திலிருந்த 28 வயதே ஆன பிரதீப் நர்வாலின் ஓய்வு குறித்த அறிவிப்பு கபடி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. நடப்பு புரோ கபடி லீக் சீசன் 12-ல் மொத்தம் 12 அணிகள் விளையாட உள்ளது. PKL 12-வது சீசனுக்கான ஏலம் நிறைவடைந்துள்ள நிலையில், போட்டிகள் அக்டோபர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.